செவ்வாய், 8 ஜூன், 2010
ஷிவ் நவீன்
திங்கள், 7 ஜூன், 2010
இந்தியன் உயிர் இந்தியனால் மதிப்பிடப்பட்டிருக்கிறது.
--------------------------------------------------------------------------
1984 இல் நீங்கள் இந்த சோகத்தை பார்த்திருந்தால் இதன் பாதிப்பு முழுமையாக தெரியும். இருபதாயிரம் பேருக்கு மேல் அப்படியே மாண்டார்கள். தெருவெங்கும் மரண ஓலம். அது ஒரு கோர சம்பவம். புது தில்லியில் ஒரு இன்டர்வியுவிற்கு சென்று திரும்பியிருந்தேன். போபாலை தாண்டி எனது ரயில் சென்னையை நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அந்த செய்தி. யுனியன் கார்பைட் ஆலையின் விஷ வாயு போபாலை நாசம் செய்து இருந்தது.
இப்போது அமெரிக்காவில் இது போன்ற ஒரு சோகம். BP யின் கடல் சார் ஆழ் துளை கிணற்றில் - ஒரு விபத்து. பதினோரு உயிர்கள் பலி. இன்னும் எண்ணை கடலில் கலந்துகொண்டிருக்கிறது. பல கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. பல மீனவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒபாமா மூன்று முறை பார்வை இட்டார்.
BP யின் இதுவரையான செலவு மட்டும் 1.5 பில்லியன் டாலர்கள். 7000 கோடி ரூபாய்.
அதாவது 11 உயிர் மற்றும் 200000 பேர் வாழ்க்கை பகுதியாக பாதிப்பட்டதிற்கு மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்பிற்கும் சேர்த்து.
ஆனால் - 20000 (இது அரசு கணக்கு இறந்தவர்கள் லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்பது அப்போது நான் தினசரிகளில் படித்தது) - உயிர் மற்றும் லட்சத்திற்கும் மேல் பாதிப்படைந்ததற்கு - இரண்டு வருட சிறை - 25000 ரூபாய் - 500 டாலர் பெறுமான ஜாமீன். ரத்தம் கொதிக்கிறது.
அயோக்கியர்களின் அரசு இயந்திரம் - கொஞ்சமும் நியாய சிந்தனை இல்லாத காட்டு மிராண்டிகள் சுரண்டிக்கொண்டிருக்கும் - இந்தியா. சத்தமாக குரல் கொடுப்போம். ஊதும் சங்கை ஊதுவோம் - விடியும்போது விடியட்டும்.
வெள்ளி, 28 மே, 2010
செவ்வாய், 18 மே, 2010
கண்கள் : சிறுகதை - யூத்ஃபுல் விகடனில் வெளியான படைப்பு.n
|
திங்கள், 22 மார்ச், 2010
ஒரு சாமியார் உருவாகிறார் (ன்?)
*********************************
சாமியார்கள் வரமா சாபமா? இவர்கள் எப்படி உருவாகிறார்கள்? சமீபத்தில் பிரபலமான நித்யானந்தா விவகாரத்தில் கவனித்தீர்களானால் - ஒன்று தெரிய வரும் - மெத்த படித்த அமெரிக்காவில் நல்ல வேலையில் இருக்கிறவரும் சொல்கிறார் - அவரால் குணமானேன் என. உலக இலக்கியத்தை கரைத்து குடித்த சாருவும் சொன்னார் அவரால் அவர் பாரியாள் குணமானதாக. எத்தனையோ அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் அவரிடம் சென்றதாக எழுதுகிறார்கள். இவரிடம் மட்டுமா? சாமியார்கள் - தெளிந்தவர்களும் இருக்கிறார்கள், தில்லு முள்ளுகளும் இருக்கிறார்கள். இவர்களை இனம் காணுவது எப்படி?
ஒரு கதை கேளுங்கள். பின்னர் இனம்காணும் விதம் பார்ப்போம்.
*********
அவன் பிறந்தது ஒரு சிறு கிராமம். திருவண்ணாமலை அருகில். படிப்பு சரியாக ஏறவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும்போது, "தினமும் இரட்டை சடையில் ஒத்தை ரோஜாவோடு வருகிறாயே? நான் படிக்க உன் அப்பனா பணம் காட்டுகிறான்?" - என கவிதை எழுதினான்.
பதினெட்டு வயதில் அனைத்து விவரமும் கைவந்தது. சாராயம், இரவு ராணிகள், சின்ன திருட்டுகள் அவ்வப்போது போலீஸ் நிலையம். ஒருநாள் அவன் ஒத்தை ரோஜா அழுதாள்.
அவளை உதாசீனப்படுத்திய அடுத்த நாள், இறந்தாள். அது அவனை நேரடியாக பாதிக்கவிட்டாலும், அவன் நட்பு கூட்டத்தின் பேச்சுக்கள் அவனை பாதித்தன. சில நாட்கள் காணாமல் போனான். அவன் திரும்பி வந்தபோது, பேசியவைகள் முதலில் அவன் நண்பர்களை கேலி பேச வைத்தது. "சாத்தானின் வேதம்" என்றார்கள்..
திரும்பவும் காணாமல் போனான். அடுத்த முறை அவன் வந்தபோது, மிகவும் மாறி இருந்தான். புரியாத சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொன்னான். அவன் பேசுவது மிகவும் நியாயமாக இருந்தது. அது எல்லாவற்றையும் விட - அவன் உடன் அழைத்து வந்து இருந்தவர், அவனை விட வயதில் மூத்தவராக இருந்தார். அவனை மிகவும் மரியாதையுடன் அழைத்தார். மூன்று ஏக்கர் நிலத்துடன் ஓரளவு வசதியுடன் இருந்த அவன் பெற்றோருக்கு, இவர்கள் இருவருக்கும் சாப்பாடு போடுவது பெரிய பிரச்சினையாக இல்லை. திரும்பவும் அவன் காணாமல் போய் விடுவானோ என்ற பயமும் இருந்தது. அவனின் நண்பன் ஒருமுறை
அவர்கள் நிலத்திற்கு அழைத்து சென்றான். கள் இறக்கிக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள்
ஜமா - அந்த காலை வேளையில் நல்ல சுதியுடன். "வாடா மொடாகுடிகாரா" - என ஒரு நண்பன் இவனை அழைக்க, அவனுடன் வந்திருந்த பெரியவர் - அந்த போதையுடன் ஆக்ரோஷமானார். "என்னடா - சுவாமிஜியை அப்படியா சொன்னாய்? விளங்க மாட்டே. அவர் கால் என் தலையில் பட்டதால்தான் நான் இன்னிக்கு உயிரோட இருக்கேன் தெரியுமா?" - என்று ஆரம்பித்தவர் "உங்க ஊரைவிட்டு போன வெறும் இந்த்ரன் இல்லைடா அவர். அந்த ஆதி சித்தன் சிவனோட மறு அவதாரமடா!" என அடுக்கிக்கொண்டு போக, கூட்டம் ஸ்தம்பித்தது. போதை எல்லாம் சர சரவென இறங்க, அவன் அந்த பெரியவரை அடக்கிக்கொண்டு இருந்தான். "அறியா பிறவிகள் - அவர்களிடம் உண்மை சொல்லவேண்டாம்" என்றான். திருவண்ணாமலை தாண்டாத அவர்கள் - காசி பற்றியும், மானசரோவர் பற்றியும் அவர் விட்ட கதைகள் கேட்டு ஆடிவிட்டார்கள்.
கள்ளுப்பானையில் தடவ வைத்திருந்த சுண்ணாம்பில் அவன் கை சென்றுவர, அந்த பெரியவர், "மொடா குடியன்" என அழைத்தவனிடம், அவர் கையால் திருநீறு வாங்கி வாயில் போடுடா என்றார். அவனும், வேறு வழி இன்றி, அவனருகில் செல்ல, அவன் வாயை திறக்க சொன்னான். அவன் திறக்க, இவன் அவன் வாயில் இட்டான்.
அவனோ அலறி அடித்து எரியுதே என அலற, அந்த பெரியவர், இப்போ தெரியுதா அவர் மகிமை என்றார்.
ஒரு பயம் கலந்த மரியாதை அவனைப்பற்றி வேருன்ற ஆரம்பித்தது.
அவனை அழைத்து சென்ற நண்பன் அங்கிருந்த சிறிய கொட்டாயை - சுத்தம் செய்து அவனை அமர்த்தி, மதிய சாப்பாடு தான் கொண்டு வருவதாக சொல்லி போனான்.
மாலை சிறு கும்பல் வந்து, அவன் சென்ற இடங்கள் அவன் அறிந்து வந்த விஷயங்கள் பற்றி ஆர்வமாக கேட்டது.
அறிந்ததும் அறியாததும், தெரிந்ததும் தெரியாததும், புரிந்ததும் புரியாததும் - வெள்ளமாக அவன் வாய் வர - எல்லாம் தெரிந்தவன் இவன் என்ற எண்ணம் மட்டும் அவர்களிடம் மெல்ல உருவானது. கேள்வி கேட்ட சிலரை, ஸ்வாமிகிட்ட அனர்த்தமா கேட்ககூடாது குழந்தை என அந்த பெரியவர் தனியாக சென்று எடுத்து விளக்கினார். அவருடைய இடது கை சரியாக விளங்காததற்கு அவர் இதுமாதிரி ஒருதடவை கேட்டது காரணம் என்றும் சொன்னார். அதன் பிறகும் யாராவது கேட்பார்களா?
*******
அடுத்த நாள் மதியம், இவனது - இல்லை - இவரது பெருமை கேட்டு பக்கத்து ஊர் பெரியவர் வந்தார். தான் பஞ்சாயத்து தேர்தலில் நிற்க விரும்புவதாகவும், ஆனால், தனது எதிரி "அவரை" நினைத்து பயமாக இருப்பதாகவும் சொன்னார். சுவாமிஜிக்கு ஆச்சர்யமாக இருந்தது தான் செய்த எதற்கும் தான் பயந்ததே இல்லை என நினைக்கும்போது தன்னை பற்றி பெருமையாக இருந்தது.
பைசா இல்லாது திருட்டு ரயில் ஏறி பாஷை தெரியா காசி போகவே பயப்படவில்லை. இலட்சக்கணக்கில் பணத்தை வைத்துக்கொண்டு எலக்ஷனில் நிற்க பயப்படுவதா?
"தைரியம் புருஷ லக்ஷணம் - உங்களுக்கு சித்தன் சிவனின் அருள்தான் இல்லை. அதை மட்டும் சரி செய்துவிட்டால் ஜெயம்தான்." என்றார் சுவாமிஜி. அதற்கு எவ்வளவு செலவாகும் என்றார் பெரியவர். "சிவன் சித்தம் பணத்தை வைத்தா?", ஒன்று கொடு பத்தாக திரும்பி கிடைக்கும் என்றார்.
தைரியம் வந்த பிறகு அனைத்து லட்சுமிகளும் அடுத்து வருவார்கள் தானே. வந்தார்கள்.
அவர் தேர்தலில் வென்றார். சுவாமிஜி - பேச்சிலேயே வெல்ல ஆரம்பித்தார். ஒன்றை பலதாக்கி சொல்ல சீடர்கள் இருந்தார்கள்.
அதன் பிறகு வருபவர்கள் தாங்களாகவே தந்தார்கள். தருவது குறையும்போது, சிவனுக்கு கேட்கிறேன். இந்த கட்டைக்கு இது போதும் என்றார். அந்த அதிகாரி, தனது மனைவிக்கு கால் வலி என்று அழைத்து வந்த போது, சுவாமிஜிக்கு இரட்டை ஜடை ஒத்தை ரோஜா ஞாபகம் வந்தது. அந்த பௌர்ணமி இரவில் செஞ்சி மலை உச்சியில், பாறையின் நிழலில் அவள் கால் விரல் பின்னி இழுக்கிறது என அமர்ந்ததும், அவள் கணுக்கால் இறுக்கி பிடித்து, உள்ளங்கால் நீவி விட அந்த வலி போய், இருவருக்கும், காம நோய் கண்டதும். பின் அவளை அது காவு கொண்டதும் - நினைவில் வர, வானம் பார்த்து ஷக்தி என்றார். அவள் பெயர்.
முழு நிலா - வானம் ஏறி மூன்று நாழிகை ஆகி இருந்தது.
இந்த இளம் பெண்ணின் கணுக்கால் தொட்டு, உள்ளங்கால் தடவியதும், உணர முடிந்தது. அவள் காதில் முணுமுணுத்தார் - நீ அறியப்படாத ஆராதிக்கப்படாத அழகு என்று. அந்த அதிகாரி அருகில் வர, லேசான சீமைச் சாராய வாடை. அதன் பிறகு, பௌர்ணமி பூஜைகள் பிரமாதமாக நடந்தன. பலரின் கால் கை வலிகள் குணமாக, பலருக்கு அது சொல்லப்பட, பலருக்கு அது மாதிரி வலிகள் வர ஆரம்பித்தது. (நீங்கள் யாரையாவது யாராவது கூட்டிப்போனத்தை நினைத்துகொண்டால் - நான் என்ன செய்ய - இது கதை )
எதாவது சொன்னால்தான் - நமக்கும் சாமியின் அருள் இருப்பது மற்றவர்களுக்கு தெரியும். இல்லையானால், நம்மை மட்டமாக நினைப்பார்கள் என நினைத்தே சொன்னவர்களும் உண்டு.
அடுத்தவன் நம்மை பற்றி என்ன நினைப்பான் என்று நினைத்து - அவன் நம்மை பெருமையாக நினைக்கவேண்டும் என்றே காரியம் செய்பவர்கள் - நமது நாட்டில்தான் உண்டு.
************
இவர்களை இனம் காணுவது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. நம்மை பார்த்ததும் இனம் கண்டு கொள்வார்கள். அவர்களின் வார்த்தைகள் பொதுவானதாக இருக்கும்.
"உங்களுக்கு மனம் சஞ்சலப்பட்டு இருக்கிறது"
"என்னை நம்பாமல் - எதற்கும் பார்ப்போமே என்று வந்திருக்கிறீர்கள்"
"உங்கள் சந்தேகம் தீர வேண்டும் - அதுதானே?"
"பயம் என்பது பிடித்து ஆட்டுகிறது. சிவனின் அல்லது அம்மனின் அருள் இல்லை"
"ஒரு தெய்வ குற்றம் நடந்திருக்கிறது"
இது மாதிரி இருக்கும். நினைத்து பாருங்கள் - வருபவரின் முக குறிப்பை வைத்து இதை நீங்கள் சொல்ல முடியாதா?
உதாரணமாக, திருநீறு அணிந்து, கலவரமான முகத்துடன் இருந்தால் என்ன சொல்வீர்கள். - "தெய்வ குற்றம் என்றுதானே?"
இதில் பாதிக்கும் மேல், அவர்களை அழைத்து வருபவர்கள் முன்பே சொலி இருப்பார்கள். அடுத்ததாக பணம் - பணம் வாங்கும் எவனும் சாமியார் அல்ல. உங்கள் மன சஞ்சலத்தை காசாக்கும் வித்தை செய்பவர்கள், சாமி அல்ல.
உங்களிடம் பயம் இல்லையானால், அதை விதைக்க பார்ப்பார்கள். "நிச்சயமாக ஒரு
துர் தேவதையின் நிழல் உங்கள் மேல் விழுந்திருக்கிறது.அதற்கு பரிகாரம் செய்துகொள்வது நல்லது என்பார்கள். வற்புறுத்தவில்லை என்பர்கள். அந்த சொல் உங்கள் மனதில் இருக்கும் என்பது தெரியும். அடுத்து - நல்லது கெட்டது - கலந்து வரும் வாழ்வில், கெட்டது நடக்கும் வரை உங்கள் மனம் காத்திருக்கும். வந்ததும், பார்த்தாயா என சிரிக்கும்.
நீங்கள் அதை உண்மை என நம்புவீர்கள். எதற்கும், ஸ்வாமிஜியிடம் கேட்டு விடுவோமே என்று செல்வீர்கள். அம்புட்டுகினாண்ட துமிட்டிகா பத்தை என அவர் நினைப்பார். இதற்கு காரணம், எதையும் பாதுகாப்பாக, safe side - செய்துவிட நினைக்கும் நம் மனநிலைதான்.
அடுத்த முறை சாமியாரிடம் செல்லும் முன் - ஒருமுறை நினைத்து பாருங்கள். "இது தேவையா?" என்று.
.
ஞாயிறு, 21 மார்ச், 2010
ழி என்றோருதேசம்
ஜித்தன்
-----------
எங்கள் நிறுவனம் கார் கியர்கள் தயாரிக்கிறது. ஜப்பானில் தலைமையகம். இந்தியாவில் இருக்கும் அவர்களின் நான்கு தொழிலகங்களில் எங்களது பெரியது.எங்கள் ஜி. எம் - ராஜ் குமார்.அவனது காரியதரிசி நான். முப்பது வருடங்களாக அவனுக்கு கீழ் வேலை. அவனை விட மூன்று வருடம் மூத்தவன். எங்கள் படிப்பு ஒன்றாக இருந்தாலும் அவன் திறமை எனக்கு வராது.திருட்டு ஜித்தன். சம்பளம் 2 லட்சம் என்றால் அவன் வருமானம் 20 லட்சம் இருக்கும். என்ன செய்ய அவன் உயர உயர - என்னையும் கூட அழைத்து சென்றான். லட்சங்களை விடுங்கள் - நானும்தான் அவனை அண்டி பல லட்சம் பார்த்துவிட்டேன். அவன் திமிர்தான் - சமயத்தில் கத்துவான் பாருங்கள். வேலையை தூக்கி எறிய தோன்றும். சாதக பாதகங்களை பார்த்து பொறுத்துக்கொள்வேன். நான் இல்லாவிட்டால் அவனுக்கு வேலை ஓடாது. அவன் மட்டும் அல்ல அவன் மனைவியும் என்னை படுத்துவாள்.படு பாதகன் என்றாவது மாட்ட வேண்டும் நான் அதை பார்த்து சிரிக்க வேண்டும்.அவன் மகனையும் மகளையும் அமெரிக்காவிலும் லண்டனிலும் படிக்க வைக்கிறான்.ஒன்று சொல்லியாக வேண்டும். உழைப்பு என்பது அவன் உயிராக மூச்சாக இருந்தது.இரவு பத்து மணிக்கு என்னை போனில் அழைத்து அவன் மனைவியை உடனடியாக டாக்டரிடம் அழைத்து போக சொல்லி இருக்கிறான். அவன் அலுவலகத்தில் இருந்துகொண்டு.சில சமயம் நினைத்துக் கொள்வேன். அவன் உழைப்புக்கு தகுந்த ஊதியம் அவனாக எடுத்துக்கொள்கிறான் என்ன தவறு என்று.அந்த நாள் வந்தது. ஜப்பானிய தலைமையகம் எல்லா ஜி.எம்மையும் டோக்கியோவுக்கு அழைத்திருந்தது. விவாதத் தலைப்பு - "பணியில் நேர்மை - work ethics". மாட்டினாண்டா - அந்த ஜில் ஜில் நினைவே இனிமையாக இருந்தது.கலவரத்துடன் என்னிடம் கேட்டான். "நமது ஸ்டாப் யாராவது மொட்டை மெயில் அனுப்பி இருப்பார்களோ?"சாகட்டும் பயத்தில் என்று - பட்டும் படாமலும் பதில் தந்தேன்.இரவு பத்து மணிக்கு சென்னையில் கிளம்பி சிங்கப்பூர் வழியாக டோக்யோ நரிட விமான நிலையம் அடையும் போது அந்த ஊர் நேரம் மாலை 7 மணி. சுஷி தெரியாகி சிக்கன் ஜானி வாக்கர் - முடித்து 11 மணிக்கு படுக்கையில் விழுந்தேன். இரவு இரண்டு மணிக்கு அடுத்த அறையில் இருந்து போன். இந்த ஒரு வருடத்தில் இறக்குமதி தீர்வை எஞ்சின் வால்வுகளுக்கு எந்தனை சதம் உயர்ந்திருக்கிறது என்று.இவன் மனிதனா இல்லை ஜப்பான் காரனின் ரோபோவா?அடுத்த நாள் உலகின் அனைத்து பகுதி அதிகாரிகளும் பிரசண்டேஷன் கொடுத்தார்கள். ராஜ் மட்டும்தான் அனைவர் கைத்தட்டலையும் பெற்றான். Checks and Balances - தகவறிதலும் சமன்படுத்தலும் - என்று ஆரம்பித்தான். இப்போது இருக்கும் ஆடிட்டிங் சரியில்லை என்றான். அது இறந்தபின் நடத்தும் அறுவை என்றான். ஒவ்வொரு கிளையிலும் ஒரு செயல்திறன் பார்வையாளர் இருக்க வேண்டும் அவர் நேரடியாக தலைமை நிலையத்திற்கு மட்டும் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். இது நேர்மையை நிர்வகிக்கும் என்றான். எல்லோருக்கும் இது பிடிக்கவில்லை - ஆனால் தலை - யோஷிமோ - பரவசம் அடைந்து சரி என்று பாராட்டியதால் - அனைவரும் கை தூக்கினர். என்னடா இது எவனாவது செஞ்சிக்குவானா தனக்கே ஆப்பு - என்று எண்ணிக்கொண்டேன். இந்தியா வந்த ஆறாவது நாள் - இன்டர்வியு செய்தது 10 சார்டட் அக்கௌடன்ட். எல்லோருக்கும் எண்கள் தந்து எழுத்து தேர்வு நடத்தினான். அதே எண்களுடன் நேர்முக தேர்வும். ரங்கராஜன் எல்லாவற்றிலும் முதலாக இருந்தான். வினோத் எல்லாவற்றிலும் கடை. அவர்களின் எண்கள் 4 மற்றும் 8 . வினோத்தின் கண்களில் ராத்திரி குடித்த வோட்கா மிச்சம் இருந்தது. அவன் தந்தைக்கு ஜானி வாக்கர்தான் பிடிக்கும். எத்தனை தடவை எங்களோடு வந்திருப்பார்.அன்று வீடு திரும்பும்போது அவன் காரில் வரச்சொன்னான். அவன் புகழ் பாடுவது பழகிப்போச்சுதானே. பாடினேன். நாலையும் எட்டையும் மாற்றிவிடு என்றான். நான் செய்யாததா - சரி என்று ..... இருங்கள் ... சரி சரி .... அங்கு நல்ல வேடம். அதற்கு பரிகாரம் ஒரு தலையாட்டி ஆடிட்டர். இவன் ஜித்தனா இல்லையா. அவன் வீட்டிற்கு சென்றபின் - நீது அவன் மனைவி - விருந்தோடு காத்திருந்தாள். எங்களின் நட்புக்கு பாராட்டு என்றாள். விருந்து முடிந்தபோது - நீது மட்டும் சிறிது நிதானமாக இருந்தாள்.நான் வீட்டுக்கு போயே ஆகா வேண்டும் என்றேன். நீது கார் ஓட்டினாள். ராஜ் அவன் திறமையை அவனே புகழ்ந்து கொண்டிருந்தான். நான் அவன் அறியாது நீதுவை தீண்டிய நேரம் - அந்த விபத்து. சம்பவ இடம் அம்பு குறியிட்டு தின இதழ்களில் வந்த நேரம் நாங்கள் சொர்க்க/நரக வாசலில்.இருங்கள் கதை முடியவில்லை. மூவரும் ஒருசேர வந்ததால் - ஒரே நேரத்தில் விசாரணை. "ராஜ் நீங்கள் தவறு எதையும் செய்யவில்லை. நிறைய வேலை வாய்ப்பை உருவாக்கினீர்கள். உங்கள் மனைவியின் இன்பத்தில் குறுக்கிடவில்லை. மேல் அதிகாரிகளுக்கு உண்மையாய் இல்லை. அது மட்டும் தவறு. அதனால் ஒரு வருட நரகத்திற்கு பின்னர் சுவர்க்கம் செல்லலாம்."அடுத்து நான் - " நேராக நரகம்" -எதிர் பாராததா?அடுத்து நீது - "நீங்கள் ராஜை மணம் மட்டும் செய்தீர்கள் - பின்னர் உங்களின் இரு குழைத்தகளுக்கும் தந்தை இந்த நரன். அதனால் அவனோடு நீங்களும் செல்லுங்கள்." நீது சிரித்தாள். இவன் கொடுத்த தண்டனை வலிக்க வில்லை - நீதுவுடன் எங்கு வேண்டுமானுலும் செல்லலாம்.
ஆனால் - ஒரு கதை முழுக்க நானும் - 30 வருடங்களாக நாங்களும் காத்துவந்த ரகசியத்தை போட்டு உடைத்து விட்டானே - பாவி.
ராஜ் குமாருக்கு சொர்க்கம் சொர்கமாக இருக்குமா?
ஞாயிறு, 7 மார்ச், 2010
யார் கடவுள் -
யார் கடவுள்
எனது மகள் பள்ளியில் இருந்து ஆர்வமாக ஓடி வந்து தனது கட்டுரைக்கு A+ கிடைத்ததை காட்டி, அப்பா மிஸ் கான்லி ("Bra burning feminism is not needed, when we have earth saving motherhood") - இந்த கால அமெரிக்க மகளிர்போல் மார் கச்சை எரித்து பெண்ணியம் நிரூபிக்க வேண்டியதில்லை, தாய்மையை எல்லா இடங்களிலும் காண்பிப்போம் - என எழுதியதை மிகவும் சிலாகித்து எல்லோருக்கும் படித்து காட்டினாள் என்றாள். அவள் பாட்டியின் அபூர்வ தாய்மை அவளுக்கு நானா சொல்லித்தரவேண்டும்?1985 எனது கடைசி தம்பியை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியுட்டில் சேர்த்து ஆறு மாதம் ஆகி இருந்தது. எனது பெரிய தம்பியும் அம்மாவும் உடன் இருந்தார்கள். அன்று வெள்ளிக்கிழமை - மாயூரத்தில் இருந்து நான் சென்னை வந்து கொண்டிருந்தேன். ஏதோ தோன்றியது - கிளம்பிவிட்டேன், முன் அறிவிப்பின்றி. மாலை ஆறு மணியிலிருந்து மூன்று தந்தி அடித்திருக்கிறான் என்னை வர சொல்லி. காலை நான் அங்கு சேர்ந்தபோது, பாண்டியன் எனது பெரிய தம்பி அடக்க முடியாத அழுகையோடு இருந்தான். லிம்போ ப்ளாஸ்டிக் லுகேமியா - இரத்த புற்றுநோய் பற்றி நான் நிறைய தேடித்தேடி படித்தேன் அந்த ஆறு மாதங்களில். நினைத்தாலே இனிக்கும் பல முறை பார்த்திருந்தேன். சர்வேஸ் நிச்சயம் பிழைக்க மாட்டான் என முடிவு செய்திருந்தேன். அதற்கு மனதளவில் என்னை தயார் செய்திருந்தேன். அவன் அப்போது ICU வில் இருப்பதை தாங்க முடியவில்லை. சனியன்று சாதாரணமாக இருந்த வயிறு ஞாயிறு மாலை 72 இன்சு வீங்கி இருந்தது. தங்கை அவள் குடும்பம் வந்து பார்த்து சென்றது. அவள்தான் எல்லா உதவிகளும் செய்து கொண்டிருந்தாள். எங்கள் தந்தை ஒரு குழந்தை. அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. பிழைச்சுக்குவானா என்று மட்டும் நொடிக்கு நூறுதரம் கேட்டுக்கொண்டிருந்தார்.டாக்டர் மைத்ரேயன் (தற்போது அ தி மு க - MP) - நிலைமையின் தீவிரத்தை என்னை அழைத்து சொன்னபோது திங்கள் காலை 8 மணி. டாக்டர் சாகர் (இப்போதும் அங்கு இருக்கிறார் என நினைக்கிறேன்) - தம்பி கவலை படாதே கடவுள் இருக்கிறான் என்றார். டாக்டர் மைத்ரேயன் - இப்போதே வேண்டுமானாலும் நீங்கள் எடுத்து செல்லலாம் - தாம்பரத்தில் ஐஸ் ஏற்பாடு செய்கிறோம் என்றபோது எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. ஒரு நிமிடம் என்று அனுமதி கேட்டு அப்பாவிடம் போனேன். அவரிடம் இருந்து அழுகை மட்டுமே வந்தது. பாண்டியன் சர்வேசின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தவன் எழுந்திருக்கவே இல்லை. தனியனாய் உணர்ந்தேன் - இல்லை அம்மா இருக்கிறார்கள் - அவர்களிடம் சென்று டாக்டர் இப்படி சொல்கிறார் என்றேன். அவன் அருகிலேயே காலம் கழித்த அம்மா சொன்னார்கள் - "அழாதேடா குழந்தை - அவன் சரியாகிவிடுவான். இப்போ எல்லாம் அவனை கூட்டி செல்ல கூடாது. டாக்டர் கிட்ட சொல். இப்பதான் சாந்தா அம்மா வந்தாங்க - அவன் பிரச்சினை சொன்னங்க. ஒண்ணும் பயப்பட வேண்டாம். " அதை வேத வாக்காக எடுத்து கொண்டேன். எனக்கு தாயிற் சிறந்த கோயில் இல்லை.டாக்டர் மைத்ரேயனிடம் சென்றேன். "அவனுக்கு உயிர் தர முடியாவிட்டாலும் அமைதியான சிரமம் அற்ற மரணம் தாருங்கள். அவன் உயிர் பிரியும் வரை இங்கிருந்து எடுத்து செல்ல முடியாது" என்றேன். அவர் புன்னைகைத்தார்.பத்து மணி இருக்கும், ஏதோ கான்பெரென்ஸ் இருக்கும்போல் - அனைத்து டாக்டர்களும் மாயமானார்கள். அம்மா மட்டும் சர்வேசிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள். மலம் ஜலம் நின்று ரொம்ப நேரம் ஆகி இருந்தது. நர்ஸ் வந்து அதுவெல்லாம் நின்றுவிட்டால் அவ்வளவுதான் என்று பயமுறித்தி சென்றாள். அம்மா அவனுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள்.மூன்று மணி இருக்கும் அவன் 100 மில்லி மூத்திரம் போனான். பேசினான்.நான்கு மணி - சாந்தா அம்மா வந்தார்கள் - சர்வேஸ் எப்படி இருக்கே என்றார்கள் - நல்ல இருக்கேன் டாக்டர் நீங்க எப்படி இருக்கீங்க என்றான். அவன் ஜலம் கழித்ததை அறிந்து மகிழ்ந்தார்கள். அவனுக்கு ஒரு ஊசி போட்டுவிட்டு வெளியில் சென்றவுடன் - நான் ICU வுக்கு செல்லாமல் அவர்களை பார்த்துகொண்டிருந்தேன். வரவேற்பு அறையில் இருந்த வேங்கடவனுக்கு அவர்கள் நன்றி சொல்லி கை கூப்பி இருந்தார்கள். அம்மா!!!!!அடுத்த இருபது நாட்கள் அவன் ICU வில் இருந்தான். ICU வில் பட்டாசு வெடித்து பார்த்து இருக்கிறீர்களா? தீபாவளி வந்தது. சாந்தா அம்மாவே வாங்கிவந்து தந்தார்கள். சர்வேஸ் மத்தாப்பு கொளுத்தினான் அங்கு. ICU வில்.ஆயிற்று 25 வருடம் - சாந்தா அம்மாவையும் மறக்க முடியாது. மைத்ரேயனையும் சாகரையும் மறக்க முடியாது.ஒன்று மட்டும் சொல்ல வேண்டும் - இப்போது 35 வயதில் நலமாக இரண்டு குழந்தைகளோடு இருக்கிறான் சர்வேஸ்.அம்மாவிடம் அன்று கேட்டேன் - அது எப்படி நீ வணங்கும் தெய்வம் மட்டும் உனக்கு பதில் அளிக்கிறது என்று?"புண்ணாக்கு - அன்று எனக்கு தெரிந்ததைத்தான் செய்தேன். சாந்தா அம்மா சொன்னாங்க அவனுக்கு நினைவு தப்பியதும் அழைத்து போங்கள் என்று. நான் அவனிடம் பேசிக்கொண்டு இருந்தேன், நினைவு தப்பாமல் இருக்க. கடவுளை அழைக்க எனக்கு நேரம் எங்கே இருந்தது என்று"நீயே கடவுள் அம்மா உனக்கு எதற்கு இன்னொரு கடவுள்.
யூத்புல் விகடனில் வந்த அனுபவக் கட்டுரை
மகளிர் தின ஸ்பெஷல்
http://youthful.vikatan.com/youth/Nyouth/sakthi2010/nividitatamil050410.asp
புதன், 24 பிப்ரவரி, 2010
பூகம்பம் - யூத்புல் விகடனில் வெளியான சிறுகதை
பூகம்பம் : சிறுகதை - நிவேதிதா தமிழ்
யூத்புல் விகடனில் வெளியான சிறுகதை.
அது பூமிகாவின் அலுவலகம்.
பூவுலகின் இயக்கங்களை நிர்ணயிக்கும் உயரிய இனங்கள் வாழும் நகரின் மத்தியில் இருந்தது அது.
கின்னரன் விக்னேஷ் பூமிகாவின் முன்னால் பலி ஆடாக நின்றிருந்தான். காலத்தை கடந்த அவர்கள் வெளியில் பூவுலகில் நடந்த நடக்கப்போகும் நிகழ்வுகளின் பிரதிகளை ஆய்ந்து கொண்டிருந்தாள்.
அவள் எந்திரத்தில் காலம் நின்றிருந்த நேரம் 2010 ஜனவரி 12.
"என்ன ஒரு பேரழிவு கின்னரா ஹைதியில். மூன்று லட்சம் பேர் சாகிறார்கள். இதை தடுக்க வேண்டிய விஞ்ஞான வளர்ச்சி ஏன் இல்லை."
"அது கிம்புருடன் அறிவொளி.."
"அழைக்கிறேன் அவனையும்," என்றாள்.
பலியாடுகள் இரண்டாகி நிற்க - நாசாவின் Saturn V ராக்கெட்டை கொண்டு வந்திருந்தாள் இருவரின் முன்னும். அவர்களின் தேக பரிமாணத்துக்கு அது கையில் வைத்து பார்க்க போதுமானதாக இருந்தது.

"புவியை நடத்தும் நமது பரிணாம வளர்ச்சி தத்துவம் உங்களுக்கு இன்னும் சரியாக புரியவில்லை என்று நினைக்கிறேன். சொல்லுங்கள்.. இந்த ராக்கெட்டில் மனிதன் ஏன் 5 உந்து எந்திரங்களை பொருத்தி இருக்கிறான்?"
"அது அவர்கள் வேறு ஒரு இடத்தில் இருந்து இதை வடிவமைத்து ரயிலில் எடுத்து வர வேண்டியிருந்தது. அந்த ரயில் பாதையின் அகலத்துக்கு ஏற்ப என்ஜினை வடிவமைக்க வேண்டி இருந்தது."
"சரி ரயில் பாதைகள் ஏன் அந்த அகலத்தில் இருந்தது?"
"அது ஐரோப்பாவில் இருந்து - அதே நடைமுறை அகலம் - அவர்கள் வைத்திருந்த சாலை அளவுகள்"
"அவர்கள் சாலை ஏன் அந்த அளவில்?"
"பூமியின் கால கணக்கில் இன்னும் சில நூற்றாண்டுகள் பின் செல்ல வேண்டும். அவர்கள் குறிப்பாக கிரேக்கர்கள் இரு குதிரை பூட்டிய வண்டியில் பயணம் செய்ய ஏதுவாக சாலை அமைத்தார்கள். அதனால்."
"அப்படியானால் நிலவுக்கு சென்ற ராக்கெட் எஞ்சினின் அளவை நிர்ணயித்தது எது?"
"அந்த இரு குதிரைகளின் இடுப்பளவு"
"தெரிகிறது அல்லவா? ஒரு சிறு நிகழ்வு எத்தனை விளைவுகளுக்கு காரணமாகிறது என்று. ஒரு குழு உணர்ச்சியோடு செயல்பட வேண்டாமா? அறிவியல் வளர்ச்சி இந்த 2010 இல் பூகம்பத்தை முன்னறிய வேண்டாமா?"
"அது பூமிகா, காக்க முகிழ்த்த அழிக்க வேண்டியுள்ளது." கின்னரன் சொன்னான்.
"நான் கிம்புருடனை கேட்கிறேன். அறிவியல் வளர்ச்சி ஏன் ஒருமித்து இல்லை?"
"அது பூமிகா, இந்திய அறிவாளிகளை பிடிக்க பார்த்தேன். கையில் பெட்டியோடு அமெரிக்கா போய்க்கொண்டு இருக்கிறார்கள். சைனா விற்பன்னர்களோ கையில் நகல் எடுக்கும் காகிதங்களோடு அமெரிக்க ஐரோப்பிய நுட்பங்களுக்கு காத்திருக்கிறார்கள். அந்த அமெரிக்க ஐரோப்பியர்களோ பணச்சந்தை விளையாட்டில் சரிவு தேக்கம் தொய்வு என உழன்று கடைகளை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். அரசியல் பொருளாதாரம் பார்க்கும் காந்தர்வன் எங்களுடன் ஒத்துழைப்பதே இல்லை."
"இதை சரி செய்ய வேண்டும். அழைக்கிறேன் புருஷையும். குழு மனப்பான்மை இல்லா விடில் நீங்கள் அனைவரும் தண்ணி இல்லா கிரகத்துக்கு போக வேண்டி இருக்கும்!"
பூமிகா என்ன செய்தாளோ? நாம் பூவுலகில் நடந்ததை பார்ப்போம்.
*
அமெரிக்காவின் மிகச்சிறந்த நிருபர்களில் நானும் ஒருத்தி. எனது அலுவலகம் தனியானது. எந்த பத்திரிகை அல்லது தொலைக்காட்சியையும் சாராதது. எந்த அரசியல் கட்சியையும் நம்பாதது. நிறைய பேர் விரும்பும் நிறைய பேர் வெறுக்கும் ஒருத்தி. வெறுத்தாலும் விரும்பினாலும் எனது எழுத்தை மட்டும் படிக்காமல் விடமுடியாது என்பதுதான் என் பலம்.
இது 2030. இருபது வருடங்கள் கழித்து ஜோயல் இடமிருந்து போன். அவனது தொழிற்சாலையில் வேலை நிறுத்தமாம். இந்த மக்களுக்காகவா இத்தனை நாள் பாடுபட்டேன் என விரக்தியாக பேசுகிறான்.
அடுத்த விமானத்தில் கிளம்ப ஆயத்தமானேன். இந்த டிஜிட்டல் உலகத்தில் ஒரு ஹலோ கூட சொல்லாத நட்பு. இருபது வருட நட்பு. அவன் என்ன வேலையில் இருக்கிறானோ? எதற்கு தொல்லை செய்வது. என்ற எண்ணம்தான் காரணம். அவனும் அதேதான் எண்ணி இருக்க வேண்டும். மற்றபடி எனது வலைத்தளத்தை அவனும் அவனது வலைத்தளத்தை நானும் பார்த்து பகிர்ந்துகொண்டது ஏராளம்.
இருபது வருடங்களுக்கு முன். நான் அந்த தீவுக்கு போயிருந்தேன். 7.3 ரிக்டர் அளவில் பூகம்பம். 45 சதுர கிலோ மீட்டர் தீவு. 80 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி. ஆனால் 30 அல்லது 40 சதவீத மக்கள் தலைநகர் அல்லது அடுத்த பெரிய தொழில் நகர் நோக்கி வந்திருந்தார்கள்.
அந்த பூகம்பம் அனைவரையும் புரட்டி போட்டுவிட்டது.
ஜோயல் இரண்டாவது பெரிய நகரில் ஒரு விற்பனையாளன். வீட்டுக்கு வீடு சென்று மின் துடைப்பம் விற்பவன். அப்போது நிகழ்ந்த உலகளாவிய பொருளாதார சரிவில் வேலை இழந்தவன். தலைநகர் வந்தால் வேலை என நம்பி வந்தான். அடுத்த நாள் இந்த பேரழிவு. சுழன்றான் - எத்தனை முடியுமோ அத்தனை உயிர்களை காப்பாற்றினான். அடுத்து சின்னாபின்னமான தொழிற்சாலைகளை பார்த்தான். அமெரிக்க அரசு ஆயிரக்கணக்கில் உணவு பொட்டலங்கள் அனுப்பியது. அரசின் விமானம்தாங்கி கப்பல்கள் நங்கூரம் இட்டு மருத்துவ வசதி செய்தது.
இந்த வேலை இழந்த மனிதர்கள் கதி? எங்காவது ஆரம்பிக்க வேண்டும். வேலைதேடி அலைபவர்கள் வரிசையில் இருந்தார்கள். ஜோயல் முன்னால் வந்தான். யாருக்கு சரியாக எழுத தெரியும் என்றான். லௌரா முன்னால் வந்தாள். இவர்களின் பெயர் மற்றும் செல்பேசி எண்கள் அவர்கள் தகுதி எல்லாவற்றையும் தொகுத்து எடு என்றான். அவள் முன் அத்தனை பேரும் அடக்கமாக அனைத்தும் தந்தார்கள். அவனுக்கு ஏதோ புரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவனை பார்த்தேன்.
இத்தனை செய்கிறீர்களே இதை வைத்து என்ன செய்ய போகிறீர்கள் என்றேன். என் மக்களை வாழ வைக்க வேண்டும், அதற்காக உயிரையும் தருவேன் என்றான். அடுத்த ஒரு வருடம் அவனுக்கு புயலாக இருந்தது. அந்தனை பெயரையும் எடுத்து என்னிடம் கொடுத்து என்ன செய்ய என்றான்.
என்னை வெறுத்தவர்கள் விரும்பியவர்கள் அனைவர் விலாசமும் தந்தேன். வேலை வேண்டியவர்களையும் வேலை தர தேடியவர்களையும் இணைத்தான். சாதித்தான். இடிந்த தொழிற்சாலைகள் புதிதாக உருவாயின. புதியனவும் உருவாயின. அவன் பங்களிப்பு அனைத்திலும் இருந்தது. அவனாலும் ஒரு புதிய தொழிலகம் உருவானது.
அயராத 5 வருடங்கள். லௌரா அவன் காதலியானாள், பின் மனைவியானாள். Necessity is mother of invention - தேவையே கண்டுபிடிப்பின் ஆதாரம் - இத்தனை சாதித்தவன் இப்போது ஏன் விரக்தியாக பேசுகிறான்?
அவன் இடம் சேர்ந்தபின். நான் அவனை கட்டி அணைத்து ஆறுதல் சொல்லி...
ஒருமணி நேரம் ஆனது ஒரு இந்தியன் பூகம்பம் வருவதை பல மணி நேரம் முன் கண்டுபிடிக்கும் நுட்பம் கண்டிருந்தான். ஒவ்வொரு நாடும் பூமியின் ஆழத்தில் டேக்டோனிக் தகடுகளில் அந்த இந்தியனின் கருவியை துளையிட்டு செலுத்தி இருந்தன. இந்த தீவைத் தவிர. அரசு செய்யாததை இவன் செய்ய இவனது நிறுவனத்தின் நிதியில் இருந்து பத்து மில்லியன் செலவழிக்க இவன் செய்த ஒப்பந்தம் செய்திருந்தான். அவன் அனுபவம் இதை செய்ய சொன்னது. அதனால் தொழிலாளர்களுக்கு நிகழ்ந்த ஊதிய இழப்பு - உம்ம்ம் - இதுதான் காரணம்.
இந்த மக்களுக்கு உண்மை புரியவைக்க வேண்டும்.
இரண்டுநாள் உழைத்தேன். மூன்றாம் நாள் - அனைத்து தொழிலாளர்களையும் கூட்ட வைத்தேன்.
ஜோயலின் சாதனைகள் பட்டியல் இட்டேன். பூகம்பத்துக்கு முந்தைய தீவையும் இப்போதைய நிலையையும் காட்டினேன். ஒரு பிரளயம் நடந்தது. ஏனெனில் நான் பேச மட்டும் இல்லை - படங்கள் - வார்த்தை நூறு பேசும் என்றாள் படங்கள் - அது ஆயிரம் பேசும் அல்லவா? பேசியது.
மறத்தல் இயல்பு. இருபது வருடம் அல்லவா? மனிதர்கள் நல்லவர்கள். புரிந்து கொள்வார்கள். தவறான தத்துவ வாதம் - தலை குனியும்தான். அவர்கள் இழந்த ஊதியம் மட்டும் அல்லாது இன்னும் தந்தார்கள். அரசையும் தர வைத்தார்கள்.
தீவு தலை நிமிர்ந்தது. ஜோயல் அவன் தீவு இனி வாழும்.
*
பூமிகா தனது அலுவலகத்தில் - விருந்து கொடுத்தாள் - அவர்கள் கணக்கில் அது அடுத்த நாள். ஒரு நாளில் நமது குழு நிறைவேற்றிய வடிவமைப்பு மாற்றத்துக்கு வாழ்த்துக்கள் என்றாள். அப்பாடா எனது வேலை தப்பியது என்றான் கின்னரன். குழு மனப்பான்மை எப்போதும் வெற்றி தரும்தானே.
*
சனி, 30 ஜனவரி, 2010
ஆறாம் அறிவு? - சிறுகதை- யூத்புல் விகடனில் வெளியான சிறுகதை.
- நிவேதிதா தமிழ்
திடீர்னு தெருவோட அந்த பக்கத்துல ரீது.
அவளைப் பார்த்தாலே புத்தி என் வீட்டு வேலைக்காரன் மாதிரி ஆகிவிடுகிறது, எல்லா வேலையையும் சொதப்புது. புல்லறிச்சு போய் வேகமா ஓடினேன். அதான் தெரியும்.
தண்ணி லாரிகாரன்கிட்ட என் வேலைக்காரன் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறான்.
நான் அந்தரத்தில் பறந்துகொண்டு... பறந்துகொண்டு இருங்க.
எப்படி?
ஆஹா!!!
எனது உடல்... மண்டை உடைந்துபோய். லாரிக்கு கீழே..!
புரிந்துவிட்டது. மண்ணில் இருக்கும்போதுதான் நேரம் பிடிக்கிறது, எதையும் புரிந்துகொள்ள. உடலை உதறியவுடன்எல்லாம் தெளிவாக தெரிகிறது.
சரி, அடுத்த வேலையை பார் என்று பக்கத்தில் குரல்.
அழகான வரவேற்பறை.
உள்ளே நுழைந்ததும் ஒரு புது கவுண்டர் ஓபன் ஆகிறது எனக்காக. பூமியில்தான் எங்க பாத்தாலும் கியூ. டோரா தி எக்ஸ்ப்ளோரர் தொடரில் வருவாளே அது மாதிரி ஒரு அழகி.
"மீள் வருகை" என்றாள்.
நடந்தது என்ன என்பது எனக்கு தெரியும்.
"உங்களின் அனுபவத்தை பதிவு செய்ய வேண்டும். சொல்லுங்கள்," எனறாள்.
நான் பேச பேச திரையில் உண்மையாக நடந்தவை முப்பரிமாணத்தில் வந்தது.
"இத்தனை அழகாக வாழ்ந்தேனா?
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எனது வில்லாவில்தான் இருந்தேன். எனது வேலைக்காரர்கள் இருவரும் என்னை அன்புடன் பார்த்துக்கொண்டார்கள். காலை உணவு முடிந்ததும் வெளியில் சென்று விடுவார்கள். எனது வில்லாவை ஆனந்தமாக சுற்றி வருவேன். டோரா தி எக்ஸ்ப்ளோரெர் பார்ப்பேன் டிவியில்.
இந்த வேலைக்காரி துணி துவைக்க வீடு சுத்தம் செய்ய வருவாள். மடியில் வைத்து கொஞ்சுவாள். அது பிடிக்கும்தான். ஆனால், டிவி சேனல் மாற்றி விடுவாள். அதில், இந்த மனிதர்கள் பெண் தொப்புளில் பம்பரம் விடுவார்கள் அல்லது ஆம்லேட் போடுவார்கள். இலையென்றால் நீள கத்தி வைத்துக்கொண்டு கத்துவார்கள். இல்லையென்றால் 'உம்ம் தில்லாலங்கடி சரசு' என்று குதிப்பார்கள். அவள் போனதும் நான் மறுபடியும் டோரா சீரியலுக்கு போய் விடுவேன்.
மாலையில் கொஞ்சம் வேலைக்காரனுடன் விளையாட்டு, வெளியில் நடை. பின்னர் சாப்பாடு. வார இறுதியில் காரில் ஊர் சுற்றுவோம். பக்கத்து வீட்டில் ரீது வந்தபின் மாலை நடை சொர்கமாகி விட்டது. எனது வேலைக்காரி பெரிய வயிறுடன். அதனாலோ என்னவோ எனது வேலைக்காரன் தவறாது வாக்கிங் வருவான். நான் ரீதுவுடன் கொஞ்ச அவன் பக்கத்துவீட்டு பாலா மாமியுடன் குலாவுவான்.
இந்த வேலைக்காரர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. என்னை தவிக்க விட்டார்கள். நேரத்துக்கு சாப்பாடு கிடையாது. ரீதுவை பார்க்க முடியவில்லை. சே... பேஜாரு.
என்னை அந்த குழந்தைகிட்ட போகவே விட மாட்டங்க. ஒரு நாள் எனக்கு நகம் வெட்டிவிட ரெண்டு பேருக்கும் சண்டை. என்ன எழவு பேசினாங்களோ? அதுக்கப்புறம் ரெண்டு தடவை - இந்த வேலைக்காரன் வெளியே போகும்போது என்னை மறந்துவிட்டு அவன் மட்டும் காரில் வீட்டுக்கு வந்துவிட்டான். மூணாவது தடவை - நான் வீட்டுக்கு வந்து விட்டேன் -அந்த லூசு வழியை மறந்துவிட்டது. அன்னிக்குத்தான் நான் உள்ளே வரேன் ஒரு நாகப் பாம்பு - குழந்தையை நெருங்கி நக்கிக்கொண்டிருந்தது. விடுவேனா? என்ன இருந்தாலும் எனது வீடு. எனது வீட்டு குழந்தை. பிச்சி வீசிட்டேன்.அன்னியிலே இருந்து ராசா உபசாரம்தான்.
என்ன பண்ண? அடுத்த மூணாவது நாளே இந்த விபத்து."
டோரா சிரித்தாள். அவள் கரங்கள் பதிவு இயந்திரத்தில் விளையாடிக்கொண்டு இருந்தன.
சில நொடிகளுக்கு பின் கேட்டாள்.
"நீங்கள் ஒரு வருடம் உங்கள் விருப்பப்படி உலவலாம். உங்களது தகுதி உயர்ந்திருக்கிறது. இப்போது 1004 புள்ளிகள் எடுத்து இருக்கிறீர்கள். விரும்பினால் இந்த ஐந்தறிவு இனத்தில் இருந்து ஆறறிவு மனித இனமாக பிறக்கலாம். தங்களின் விருப்பம் என்ன?"
"மனித இனமா? இப்போதா? என்னை என்ன கூமுட்டை என்று நினைக்கிறீர்களா? சாதி மதம் மொழி என்று வெட்டிக்கொண்டு சாகவா? இல்லை பெண்ணாக பிறந்து கள்ளிப்பால் குடிக்கவா? இல்லை கஞ்சி குடிப்பதிற்கிலார் அதன் காரணங்கள் இவை என்றும் அறிவும் இலார் என்று பாரதி சொன்ன ஈனப்பிறவிகளாக வாழவா? இல்லை வேலை பணம் பெண் காமம்என்று அலையும் பணக்கார லூசுகளாக முட்டி மோதி உழலவா?"
அதற்கு பிறகும் பேசினேன். வாக்கியமாக எழுதினால் இன்டர்நெட் ஜாம் ஆகிவிடும் - அதனால் சுருக்கமாக - "சொந்த மண்ணில் அகதி.. பெயரை தொலைத்த இரவு கூலிகள்.. மதத்தை தவறாக புரிந்த வாதைகள் (வாதிகள்?) - பசியின் பிடியில் மடியும் - ஏய்க்கும் அரசியல் வியாதிகள்..."
"மன்னியுங்கள் அடுத்த பிறவியும் இதே மாதிரி நல்ல நாயாக பணக்கார நாட்டில் பிறக்க வேண்டும். சாரி!" என்றேன்.
சரிதானே?
டோரா சிரித்தாள். அதற்கு அப்படியே ஆகுக என்று அர்த்தம்.
உங்கள் வீட்டுக்கு வரவா?
*
விகடனில் படிக்க.
http://youthful.vikatan.comhttp://youthful.vikatan.com/youth/Nyouth/niveditatamilstory300110.asp
வியாழன், 28 ஜனவரி, 2010
ஆகாயத்தில் ஆரம்பம் நிவேதிதா தமிழ்.
நான் இந்த கதையின் ஆசிரியன்.இந்த இடத்துல, அவங்களா கதை சொல்லும்போது இவன் எதுக்குன்னு நினைக்காதீங்க. அவங்க ஆராய்ச்சிகள் தொடும் புள்ளியை மட்டும் சொல்லிவிட்டு நான் விலகிக்கிறேன். சரியா? வானதி சீஷோபர்னியா - என்ற மனச்சிதைவு நோய் பற்றி விளக்கம் தேடி அலைகிறாள். நிறைய அமெரிக்கர்களை பரிசோதனை செய்திருக்கிறாள்.பாரனாயிடு மற்றும் ரெசிடுவல் வகை நிறைய பார்த்துவிட்டாள் ஆனால் காடடோனிக் வகை இந்தியாவில்தான் அதிகம் என அறிந்து - அதற்காக இந்த பயணம். சுருங்க சொன்னால் - தமது கற்பனைகளை நிஜம் என நம்புவது பாரனாயிடு. அதன் நீர்த்த வடிவம் ரெசிடுவல். விறைத்த உடல் பாகங்களுடன் ஒரே நிலையில் நீண்ட நேரம் இருப்பது - விறைத்த நிலையில் ஆடுவது - சாமியாடுவதை நினைத்துக்கொள்ளுங்கள். - காடடோனிக் வகை. நான் கடவுள் திரைப் படமும், சாதுக்கள் பற்றிய ஒரு குறும் படமும், அவள் தந்தையின் நீண்ட பிரசங்கமும் அவளை இந்தியாவிற்கு போக தூண்டியவை. வினீத் பௌதிகத்தில் குவாண்டம் மெகானிக்ஸ் பற்றி ஆய்வு செய்கிறான். வினீத் நம்பிக்கையில் - இன்னொரு சரிசமான உலகம் இணக்கமாக - நம் உலகம் மற்றும் அண்ட சராசரங்களை ஒட்டி இயங்குகின்றது. இதற்கு parellel universe என்று சொல்வார்கள். குவாண்டம் தியரிக்கும் இந்த இணை உலகத்துக்கும் இருக்கும் தொடர்பை நிருபிப்பது அவன் இச்சை. மூளையின் செல்களிலும் இருக்கும் ஹில்பர்ட் ஸ்பேஸ் இதற்கு காரணி என அவன் நம்புகிறான். அதன் காரணமாக இந்த இணை உலக செயல்பாடுகளை உணரும் சக்தி படைத்தவர்களை - காடடோனிக் நோயாளிகளாக - வானதியின் ஆய்வு சித்தரிப்பதை அவன் ஒப்புக்கொள்ளவில்லை. அவ்வித நோயாளிகளின் அற்புத சக்தியை பயன் படுத்தும் விதம் குறித்தானது அவன் ஆய்வு, ஆக இரண்டு பேருடைய குறியும் இந்திய சாமியார்கள். உம்ம்ம். அவர்களின் அற்புதமான ஆசிரியர்கள் கொண்ட பல்கலைகூடம். இருவரின் இடை இருந்த ஆய்வு ஒப்புமை அறிந்து அவர்களுக்கு அனுமதி தந்தது. - போதும் தானே விளக்கம் - டாடா - கதை முடிவில் சந்திக்கலாம்.
நான் முரளிதரன். அட்லாண்டாவில் இருக்கும் மகளை பார்த்துவிட்டு ஊர் திரும்புகிறேன்.வானதியையும் விநீத்தையும் பார்த்த அரை மணிநேரத்தில் என்மகளைவிட மருமகனைவிட நெருக்கம் வந்து விட்டது. அமெரிக்காவில் இருக்கும் இரண்டாம் தலைமுறை இந்தியக்குழந்தைகளின் மதம் கலாச்சாரம் பற்றிய தள்ளாட்டம் இவர்களிடம் அப்பட்டமாக தெரிந்தது. .நிறைய கேள்விகள் கேட்டார்கள். நான் ஒரு கிராமத்து ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியன். கேள்வி கேட்கும் மாணவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. அவர்களின் ஆராய்ச்சியும், உயரிய லட்சியங்களும் அசரடித்தது.எனக்கு தெரிந்தவரை சித்தர்களை பற்றியும், ரமண மகரிஷி பற்றியும் திருவண்ணாமலை மகிமை பற்றியும், அங்கிருக்கும் பசியறியா சாதுக்கள் பற்றியும் ஒவ்வொரு பௌர்ணமியிலும் குவியும் லட்சக்கணக்கான மக்கள் பற்றியும் சொன்னேன். அதன் அருகில் இருக்கும் எனது கிராமத்தில் , என்னுடன் இருக்கும் தாயும் சிறிது மனநலம் பாதித்தவள் என்றேன்.உன்னிப்பாக கேட்ட வானதி இது ரெசிடுவல் வகை சீஷோபெர்னியா என்றாள்.நான் அனுமதித்தால் வந்து என் தாயை பார்ப்பதாக சொன்னாள். அமெரிக்க டாக்டரிடம் ஓசியில் வைத்தியம் பார்த்துக்கொள்ள கசக்குமா என்ன? திருவண்ணாமலையில் இருக்கும் எனது மருமகன் மூர்த்தியை அறிமுகப்படுத்தவும், எனது வீட்டில் அவர்கள் தங்க ஏற்பாடும், மூர்த்தி அவர்களுக்கு அங்கிருக்கும் அனைத்து வகை சாதுக்களை சந்திக்க வகை செய்யவும் முடிவு செய்தோம்.மூர்த்தி அங்கு ஒரு ஆசிரமத்தில் பணி செய்கிறான்.
தமிழகத்தின் விருந்தோம்பல் பற்றி அப்பா சொன்னது எவ்வளவு உண்மை! எனது மாமா வீட்டில் ஒரு நாள் இளைப்பாறிவிட்டு - திருவண்ணாமலை சென்றோம். முரளி சார் வீட்டின் உபசரிப்பு திக்கு முக்காட வைத்தது.அவரின் மனைவியும் மகளும் அன்பின் மறு உருவாக இருந்தார்கள்.அவரின் தாயிடம் சீஷோபெர்நியாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை - அவர்களிடம் தனியாக பேசும் வரை. தன் கணவர் பக்கத்து தெருவில் வசிப்பதாக சொன்னார். முரளி சார் ஏதோ குடும்ப விவகாரத்தை மறைப்பதாக நினைத்தேன். சிறிது நேரம் கழித்து தனக்கு குடும்ப பென்ஷன் - அவர் கணவர் இறப்பின் மூலம் - வருவதால்தான் - தன் மருமகள் தன்னை கவனிப்பதாக சொன்னதும் - புரிந்தது. பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் சூனியம் வைத்து இவர்கள் குடும்பத்தை அழிப்பதாக சொன்னார். தான் கந்த சஷ்டி கவசம் படிப்பதை நிறுத்தினால் அவ்வளவுதான் - நாய்க்கிருமிகள் வீட்டை சூழ்ந்துவிடும் என்றார். முரளி சாரிடம் பேசியபோது அவருடைய பெற்றோரின் மித மிஞ்சிய அன்யோன்ய வாழ்க்கையும் - அவர் தந்தையின் இழப்பு தாயை புரட்டி போட்டதையும் விளக்கினார். படிப்பறியா இந்திய பெண்களின் நிலை கண்ணீர் வரவழைத்தது.அவரின் உடல் நிலை சோதித்தபின் - உங்களுக்கு ஒன்றும் இல்லை என்றேன். இவனிடம் சொல்லு - பாரடா அமெரிக்காவில் படித்த டாக்டரே சொல்லிவிட்டாள் - இனிமேல் என்னை எந்த டாக்டரிமும் கூட்டி செல்லாதே என்றார். அனாலும் எந்த வியாதியும் வராதிருக்க சில மருந்துகள் தருகிறேன் என்று நான் தந்த அனைத்தையும் குழந்தையின் ஆர்வத்துடன் வாங்கி பத்திரப் படுத்திக்கொண்டார். வினீத்திற்கு சுவாரஸ்யமாக ஒன்றும் சிக்கவில்லை.
மூர்த்தி பேசறேன் மாமா என்றேன். இவர் எப்பவுமே லேட்டுதான். ஆறு மணிக்கு வருவாதாக சொன்னார். மணி ஏழாகிறது. பொறுமை போய் மூணு ரவுண்டு முடித்து டாஸ்மாக் விட்டு வெளியே வந்தேன். அவரின் மாருதி வேனை இன்னும் காணவில்லை. மறுபடியும் உள்ளே போக நினைத்தபோது - சுமொவிலிருந்து இறங்கினார். அவருடன் வந்த இருவரும் - குழந்தை முகமாக தெரிந்தார்கள். சொல்வதை கேட்பார்கள் ஆனால் - பாரின் சரக்கு சந்தேகம்தான் என்று தோன்றியது. பார்த்தவுடன் கணித்துவிடுவேன். "மாமா - இரண்டு மூன்று பேரிடம் சொல்லி இருந்தேன், பார்ப்பதாக - ஆனால் நேரமாகிவிட்டது". என்றேன். "மாப்பிளே பரவாயில்லை.இன்னும் ஒரு வாரம் இருப்பார்கள். இப்போ எங்கியாவது நல்ல உணவகம் செல்லலாம். உன்னோடு பேச வேண்டுமாம்", என்றார். "சரி மாமா - ரெண்டும் தளதளன்னு இருக்குங்க தண்ணி போடுவாங்களா? நமக்கு தண்ணி போட்டாதான் நல்லா ஆன்மீகம் வரும். அப்புறம் பாரின் சரக்கு இருக்கா?", - நான் பேசிக்கொண்டே போக -- மாமா டேய் .. டேய் என்றார். நானா விடுவேன். "எத்தனை காசு கறக்க முடியும்னும் சொல்லிடு மாமு. அப்புறம் பேஜாரு வேணாம்", . என்றேன். மாமா தலையில் அடித்துக்கொண்டார். சுமோவில் ஏறி முன் இருக்கையில் அமர்ந்து - அந்த உசத்தி பார் அண்ட் ரெஸ்டாரண்டிற்கு வழி சொன்னேன். ஏனோ மூவரும் அமைதியாக இருந்தார்கள்."திருவண்ணாமலை இஸ் அ டிவைன் பிளேஸ். வெல்கம்", என்றேன். "நன்றி", என்றார்கள். ..உணவகத்தில், "மாமு எனக்கு டீச்சர்ஸ் ஒரு ஆப் உனக்கு?", என்றேன். "எனக்கு வேண்டாமப்பா",. என்றார்."இந்த குட்டி குடிப்பாளா? இல்ல அவனுக்கு மட்டும் சொல்லவா?", என்றேன். எனக்கு ஒரு ஆப் - என்று சொன்னேன் அல்லவா - அது ஆப் அல்ல ஆப்பு!.அந்த பெண், "உங்களுக்கு என்ன வேண்டுமோ சொல்லிக்கொள்ளுங்கள். எங்களுக்கு காரமில்லாமல் சைவ உணவு மட்டும் சொல்லுங்கள்." என்றாள். அவர்களுக்கு தமிழ் தெரியும் என்று முன்னாடியே சொல்ல வேண்டியதுதானே? மாமாவை நோக்கிய பார்வையில் கொலை வெறி காட்டினேன். "அட புண்ணாக்கே - நீ வண்டியில் வந்தபோதே அந்த பெண் நன்றி என்று தமிழில்தானே சொன்னாள்?", - மாமா காதருகே கிசுகிசுக்க - தமிழர்கள் பொறுப்புணர்வோடு குடிப்பதில்லை - We never drink responsibly .. என்று அண்ணா சொன்னது புரிந்தது. மூணு பெக்கும் இறங்கிவிட்டது. .. இன்னும் இரண்டு பெக் முடித்தபின் தான் மீண்டும் வெட்கம் போய் பேச முடிந்தது."இந்த ஊரில் இருக்கும் ஒரு சாதுவும் விரும்பாமல் பட்டினி இருப்பதில்லை. ஏதாவது ஒரு கோவிலில் அல்லது சத்திரத்தில் அவர்களுக்கு உணவு கிடைக்கும். இங்கு கற்பூரம் விற்பவள்கூட தேவைக்கு சம்பாதிக்கிறாள். இங்கு ஒரு சாலை சந்திப்பில் தினம் விபத்து நடந்துகொண்டிருந்தது. இந்த கோணிப்பை சாமியார் என்ன செய்தார் தெரியுமா? ஒரு அமாவாசை இரவு - ,..கையில் துடைப்பம் எடுத்துக்கொண்டார் என்னைத்தான் கூட வரச்சொன்னார். சரியாக பன்னிரண்டு மணி - அடித்து துவைத்துவிட்டார். என்னங்கடா நினச்சுகிட்டு இருக்கீங்க இந்த கலாட்டாவெல்லாம் இங்க வேணாம் - நான் இருக்கேன். என்று. அந்த பேய்களெல்லாம் அன்றே ஓடி விட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஒரு விபத்து இல்லை தெரியுமா?" சரளமாக கதை அடிப்பேன் இது மாதிரி. இப்படி ஏதாவது அடித்துவிட்டால்தான் டாலர் கிடைக்கும்..... அந்த பையன் மிக ஆர்வமாக கேட்டான். "நாளை அவரை அறிமுகப்படுத்துகிறேன்", என்றேன். அவர்கள் ஏதோ குவாண்டம் காடலோனிக் சிஷோபெர்நியா என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். எனக்கு ஜாஸ்தியாகி... பிறகு எப்படி வீட்டில் காலை பத்து மணிக்கு எழுந்தேன் என தெரியவில்லை. மாமா நான்கு முறை அழைத்திருக்கிறார் - செல் போன் காட்டியது.நான் ரெடியாகி திருநீறு வைத்து அவரை அழைக்கும்போது மணி 11 . ஆயிரங்கால் மண்டபத்தில் இருப்பதாக சொன்னார். பஜாஜ் M80 விரட்டி கோணிப்பை சாதுவை பிடித்த நேரம் 12 : 30 . அவர் மூக்கு பொடி வாங்க 10 ரூபாய் கேட்டார். எனக்கு தெரியாதா? வாங்கி வைத்திருந்த பத்து பொடி மட்டைகளை கொடுக்க - குஷாலாகி விட்டார். மாமாவை அவரின் விருந்தினர்களுடன் அழைத்து வந்தபோது - இவர் விறைத்தபடி ஒரு கோணத்தில் இருந்தார், ஒரு பஸ் ஸ்டேண்டு நிழல் குடையில்.. வானதி பேசினாள் - "இது காடடோனிக் சீஷோபெர்நிய", என்றாள். "இந்த வியாதி உள்ளவர்கள் மணிக்கணக்காக ஒரே நிலையில் இருப்பார்கள்", என்றாள். "இது யோக நிலை", என்றேன் நான். "இல்லை இவர் இணை உலகத்தில் - .Parallel Universe - உலாவுகிறார்", என்றான் வினீத்.வானதி அவர் கையை பிடித்து அமரவைத்து அந்த பஸ் நிறுத்த பென்ச்சிலேயே அவள் கையில் இருந்த உபகரணங்களால் சோதனைகள் செய்தாள் சாமியாரும் தடுக்காமல் - வினீத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார். அவ்வப்போது பத்து ருபாய் கேட்கவும் தவறவில்லை. ...இதுவரை எந்த வெளிநாட்டவனும் நான் சொல்வதை மறுத்து இதுமாதிரி நடந்துகொண்டது இல்லை.நாம ஏதோ கதை சொல்லிக் கொண்டு காசு பார்த்துக்கொண்டு இருக்கோம். என் வேலைக்கு ஆப்பு வைத்து விடுவார்களோ? இவர்கள் வெளிநாடுதான் ஆனாலும் தமிழர்கள் ஆயிற்றே?.. குழப்பமான மனநிலையில் - எனக்கு குவார்டர் தேவைப்படவில்லை அன்று. இதுக்கு ஒரு வழிதான் இருக்கு. இங்க குகையில ஒரு ஆள் இருக்கார். அவரை சாமியா ஏன் சாமியாரா கூட நான் பாக்கலை.இந்த மாதிரி டாலர் கொட்டும் மர மனிதர்களை அவர் கண்ணுக்கு நானோ அல்லது என் சகாக்களோ காட்டினோம் அவ்வளவுதான் - என்ன பேசுவாரோ எது பேசுவாரோ - அவர்கள் அடுத்த நாளே டாடா சொல்லி கிளம்பி விடுவார்கள்.நாம ஏதாவது கேட்டோம் அவ்வளவுதான் - "நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றிவந்து முனமுனன்று சொல்லும் மந்திரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ" ன்னு மூச்சு விடாம சொல்லிவிட்டு அடுத்த பாட்டு ஆரம்பிப்பார். அந்த ரெண்டாவது பாட்ட கேக்க நாங்க என்னிக்கும் இருந்ததில்ல.... இதுங்க ரெண்டும் நமக்கு ஆப்பு வைக்கறதுக்கு முந்தி, அவர் கிட்ட கூட்டி போக வேண்டியதுதான்...அடுத்த நாள் குகைக்கு அழைத்து சென்றேன். அவர் தெளிந்த ஞானி - உங்களை பார்த்ததும் உங்கள் மனதை படித்து அப்படியே வேண்டியதை கொடுப்பார் - என்றெல்லாம் சொல்லி பில்டப் கொடுத்தேன். ரெண்டு பார்டியில ஒண்ணு புட்டுகிட்டாலும் நமக்கு நல்லதுதானே?நடந்தது?... அவர்களின் பேச்சை அப்படியே கேட்டால்தான் புரியும்."குழந்தைகளா என்ன வேண்டும்""சார் - நாங்கள் ஆராய்ச்சி மாணவர்கள்""என்ன வேண்டும் என்றுதான் கேட்டேன். நீங்கள் யார் என்றா கேட்டேன்?""மன்னியுங்கள். - நான் மனச்சிதைவு பற்றி அறிய வேண்டும். இவர் இணையுலகம் பற்றி அறிய வேண்டும்.""என்ன அறிந்தீர்கள் இதுவரை?""நிறைய -- ஆனால் சந்தேகம் நிறைய இருக்கிறது.".. "அறிவீர்கள். என்னிடத்தில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?""எங்களின் அவதானிப்புகள் சரியா என்று சொல்லமுடியுமா?""நீங்கள்தான் ஆராய்கிறீர்கள். நீங்களே கண்டு அடைய வேண்டும். உங்களின் தேடல்கள் உங்களால்தான் கண்டடைய முடியும். இதற்கு எதற்கு அடுத்த உயிர்? நீ சீஷோபெர்நியா என்று நினைக்கிறாயா? கண்டுபிடி. நீ parellel universe என்று நினைக்கிறாயா கண்டுபிடி. நீ தான் செய்யவேண்டும் - என்னை விடு". என்றார். "இல்லை ஒரு வழி காட்டினீர்கள் என்றால்" வானதி சொன்னாள்."அதுதானே காட்டுகிறேன். தேடுங்கள்.கண்டடைவீர்கள்.எல்லாம் மனதில் இருக்கிறது. நான் வேண்டர்பில்ட் டாக்டர் அல்ல. காடடோனிக் ஆராய்ச்சிக்கு வழி சொல்ல. நான் முத்திக்கு வழி சொல்பவன். அதுவும் இப்படித்தான் சொல்வேன். கண்டவன் விண்டதில்லை விண்டவன் கண்டதில்லை - ஒவ்வொரு உயிரும் தனித்தனி - ஒவ்வொருவரின் தேடலும் அவர்களாலேயே கண்டு அடையப்பட வேண்டும். நான் வருகிறேன். கண்ட ஏமாற்றுப் பேர்வழிகளிடம் சிக்கி மறுளாதிர்கள்"...வானதி அடுத்த கேள்வி கேட்கும் முன்பு அவர் குகையில் மறைந்தார். அந்த எட்டடிக்கு பத்தடி குகையின் வாயிலில் நாங்கள். அவர் நடந்து உள்ளே சென்றார். சென்றாரா? வினீத் சுவர் முழுக்க தடவிக்கொண்டிருந்தான்.,வானதி சிலையாகி இருந்தாள். மாமா மரமாகி இருந்தார்.நான்?. அவர்கள் - என்ன ஆராய்ச்சி செய்தார்களோ தெரியாது ... இப்போது நான் நிஜமான பக்தன். அருணகிரியின் பாதம் என் பாக்கியம்..... இதுவரை செய்துவந்த தில்லு முல்லுகளுக்கு பிராயச்சித்தம் செய்ய .. அருணகிரி அருளவேண்டும்.
நான் கதையின் ஆசிரியன் - ஒண்ணும் இல்லீங்க கடைசியில வரேன்னு சொன்னனில்ல அதான். வானதியும் வினீத்தும் தங்க மெடல் வாங்கிய பின்னாடி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அடுத்த தடவ மலைக்கு வரப்போ சொல்றேன்னு சொன்னாங்க... ...
பயண அனுபவங்கள். - 1
சைனா செல்ல வேண்டியிருந்தது. அலுவலக வேலையாக.
அந்த 15 நாட்களில் சில சுவாரசியமான சம்பவங்கள்.
பணியில் செம்மை கூட்டிய விமான ஊழியர்.
விமான நுழைவாயிலில் இருக்கை அனுமதி சீட்டை சரிபார்க்கும் அந்த NWA ஊழியர் பணியில் வித்தியாசம் கூட்ட வேண்டும் என்று நினைத்திருப்பார் போலும். சாதாரணமாக விமான எண் இருக்கை எண்ணை சரிபார்த்து சீட்டை திருப்பி தருவார்கள் ஒரு புன்னகையுடன். இந்தியாவில் என்றால் புன்னகை நிச்சயம் இருக்காது. ஆனால் இவர் ஒவ்வொருவரின் சீட்டையும் வாங்கி அவர்கள் பெயரை படித்து. மால்கம் நல்வரவு, டைலர் நல்வரவு என்று சொல்லிக்கொண்டிருந்தார். மனதுக்குள் சிரித்துக்கொண்டே எனது முறைக்காக காத்திருந்தேன். எனது சீட்டை பார்த்தவுடன் சார் நல்வரவு என்றார். சீட்டை திருப்பி அவரிடமே கொடுத்துவிட்டு - பயணிகளில் பேதம் பார்க்கக் கூடாது - என் பெயரையும் சொல்லுங்கள் என்றேன்.அவரும் சளைத்தவராக இல்லை. மன்னித்துக்கொள்ளுங்கள். விமானம் தாமதாகிவிடக்கூடாது. அதனால்தான் என்றார். எனது பெயர் - Thirugnana Sambandam Thamizharasan.
நடுவானில் - நல்ல நேரம் நான் பிழைத்துக்கொண்டேன்.
டெட்ராய்டில் இருந்து டோக்கியோ பறந்துகொண்டிருந்தோம். வானமேறி இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும். இரண்டு பியருக்கு பிறகு கழிவறை சென்று வெளியேவந்து பணிப்பெண்ணிடம் சொன்னேன். "தண்ணீர் வரவில்லை என்று". உள்ளே சென்று பார்த்து வந்தவள் பதட்டமாக கடந்து சென்றாள்.சில மணித்துளிகளுக்கு பிறகு - கேப்டன் பேசினார். "பயணிகளுக்கு வந்தனம். எங்கள் விமான சேவையை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நாம் இப்போது அலாஸ்கா மேல் பறந்துகொண்டிருக்கிறோம். நமது விமானத்தில் சில இயந்திர கோளாறுகள் இருக்கிறது. உங்கள் தலையை திருப்பி சன்னலுக்கு வெளியே பார்த்தால் - நமது விமாத்தின் எரிபொருளை வெளிச்செலுத்திகொண்டிருப்பது தெரியும்.நாம் ஆண்கரேஜில் தரையிறங்க இன்னும் ஒரு மணி நேரம் பிடிக்கலாம்.கோளாறு சரி செய்யப்பட்டபின் திரும்ப நம் பயணம் தொடரும்." பார்த்தேன். விமான பெட்ரோல் புகை மூட்டமாக வெளியேறிக்கொண்டிருந்தது. தரை இறங்குவோமா? இங்கிருந்தே போனால் சொர்க்கம் அருகிலேயே இருக்குமல்லவா?எனது முதல வகுப்பு இருக்கையில் இருந்து எழுந்து விமானத்தின் கடைசி வரை ஒரு வலம் வந்தேன். ஒரே ஒரு குழந்தைகூட தனது இயல்பு மாறவில்லை. கலவரம் இல்லாத முகம் ஒன்றுகூட இல்லை. மதம் போதிக்கும் சிலரையும் பார்த்தேன்.அவர்களும் விதிவிலக்கல்ல. அவர்களுக்கே நம்பிக்கை இல்லாத ஒன்றை சொல்கிறார்களோ? தரையிறங்கி திரும்ப கிளம்ப மூன்று மணி நேரம் ஆனது.
டோக்கியோ -
ஜப்பானில் இந்த தாமதத்தினால் டோக்கியோவிலிருந்து ஷாங்காய் செல்லும் எனது தொடர் பயண விமானத்தை தவற விட்டிருந்தேன். ஹோட்டலுக்கு அந்த விமான நிறுவனமே ஏற்பாடு செய்திருந்தது. அந்த சீனப்பெண் ஹோட்டலுக்கு செல்லும் பேருந்தில்தான் அறிமுகமானாள். அறையில் கையில் எடுத்து சென்றிருந்த பைகளை வைத்துவிட்டு - உணவகம் சென்றேன். அந்த மேஜையில் ஒரு அமெரிக்கன் இருந்தான்.கை குலுக்கி அறிமுகமானவுடன் அவனது முதல் மனைவியை விவாகரத்து செய்ததில் இருந்து அவன் ஷாங்காயில் சீனர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியனாக இருப்பதுவரை சொல்லி முடித்தான். பார்த்ததும் உளறுவது இவர்கள் வழக்கம். அதனால் உடனே அவர்கள் நம் உயிர் தோழர்கள் என்று எண்ணிவிடகூடாது. அது அவர்கள் இயல்பு. அந்த சீனப்பெண் வந்தாள். அவள் என் இருக்கை தேடிவந்து ஹலோ சொன்னது ஏன் என்று சிறிது நேரத்தில் தெரிந்தது. ஜப்பான் நாட்டில் பிற கைத்தொலைபேசிகள் வேலை செய்யாது. பேருந்தில் வரும்போது எனது 3G தொலைபேசியை பார்த்திருக்கிறாள்.தான் ஒரு தொலைபேச வேண்டும் எனவும் அவள் போன் இங்கு வேலை செய்யவில்லை எனவும் சொன்னபோது - வழக்கமான வழிசலுடன் எனது 3G பேசியை கொடுத்தேன்.இந்த அய்-போனில் தொடுதிரை இருப்பதால் ஒரு பிரச்சினை. எண்ணை அழுத்திவிட்டு காதில் வைக்கும்போது - ஸ்பீக்கர் படத்தில் நம் காத்து பட்டால் அது எல்லோருக்கும் கேட்கும். அவள் கவலைப்படவில்லை. அமெரிக்காவில் இருக்கும் அவள் கணவனுடன் பேசினாள். அவன் நினைவாகவே இருப்பதாக அவள் சொன்னபோது - உலகில் எல்லா பெண்களும் இப்படித்தானோ? என் மனைவி மட்டும் உசத்தி என்று நான் நினைத்துக்கொண்டிருப்பது தவறு என்று பட்டது. இன்னொரு கால் என்று சொல்லிவிட்டு என் பதிலுக்கு காத்திருக்காமல் அவள் பேசினாள்.ஒரு எழவும் புரியவில்லை. மாண்டரின் - சீன மொழி. அரை மணி நேரம் இருக்கும். இந்த அமெரிக்கனும் நானும் இரண்டு பெக் ஜானி வாக்கர் முடித்து சாண்ட் விச்சையும் தின்று முடித்திருந்தோம்.அவன் முகம் அவ்வப்போது மாறியதன் காரணம் மட்டும் புரியவில்லை. போனை கொடுத்துவிட்டு - அவள் வாங்கிய நூடுல்ஸை எடுத்துக்கொண்டு நன்றி சொல்லி கிளம்பியபின், அந்த அமெரிக்கன் கேட்டான். அவள் இப்போது யாரிடம் என்ன பேசினாள் தெரியுமா? தெரியாதென்றேன். அவளுக்கு சீனாவில் ஒரு புருஷன் இருக்கிறான். அவனுக்கு தெரிந்தே இந்த முட்டாள் அமெரிக்கனை மணந்திருக்கிறாள். இன்னும் ஆறு மாதத்தில் அமெரிக்கனை விவாகரத்து செய்து விடுவதாகவும் - அடுத்த ஒரு வருடத்தில் அந்த சீனனை அமெரிக்காவுக்கு அழைத்து செல்லுவதாகவும் சொல்கிறாள்.
இந்த அமெரிக்கனுக்கு மாண்டரின் தெரியும் என அவள் எண்ணவில்லை!.
எனக்கு தலை சுற்றியது. கள்ளக்காதல் ஏதோ தமிழகத்துக்கு மட்டும் சொந்தம் என்கிறார்களே?
இன்னும் இருக்கிறது..... பிறகு சொல்கிறேன். . நிவேதிதா தமிழ்
ஆயிரத்தில் ஒருவன். யூத்புல் விகடனில் வந்த கதை
ஆயிரத்தில் ஒருவன்.
யூத்புல் விகடனில் வந்த கதை.
- நிவேதிதா தமிழ்
இப்போது அடுத்த அமெரிக்க ப்ராஜெக்ட்.
மென்பொருள் எழுதுபவன் நான். திறமையான வேலைக்காரன். நிறைய படிப்பவன். குணம்... அவ்வளவு நல்லவன் இல்லை என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். நான்கு பெண்களிடம் பழகி, பின்னர் அவர்களைப் பிடிக்காததால் விலகி இருக்கிறேன். அதற்கு மரபணுவோ அல்லது பின்-நவீனத்துவ எழுத்தாளர்களின் பாதிப்பாகவோ கூட இருக்கலாம்.
அலுவலக ப்ராஜெக்டா? அதை விடுங்கள். எனது சொந்த ப்ராஜெக்ட் ஒன்று இருக்கிறது. ஓர் அமெரிக்க பெண்ணை மணந்து, ஒரு வருடமாவது அவளோடு வாழ வேண்டும். பிடித்திருந்தால் தொடரலாம். அழகான அமெரிக்க பெண் என்பது முக்கியம்.
திட்டங்களை பல கோணங்களில் ப்ரோக்ராம் செய்ததில், விமானப் பயணம் அவ்வளவாக அசதியாக இல்லை. கோடை காலம் என்பதால் சிகாகோ அவ்வளவு குளிரவில்லை. சனிக்கிழமை இரவும், ஞாயிறும் மந்தமாகப் போனது. திங்களன்று காலை லிசாவை சந்தித்தேன்.
எனது இரண்டு வார விதவிதமான கற்பனைக் கன்னிகளைவிட தூக்கலான அழகி. 72 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் ஏற்றம் கண்டிருந்தது, ஸ்கர்ட். கட்டி வெண்ணெய்க் கால்கள். வெள்ளை உடம்புக்கான பூனைக் கண்கள் இல்லை. அழகிய கருவிழி.தோளில் கைபோட்டு அழைத்துச் சென்றாள்.
நான் வேண்டிக்கொண்ட 'பருவத மலை புளியாங்கோட்டை சாமியார்' என்னைக் கைவிடவில்லை. பழம் நழுவி பாலில் விழுந்து, அதுனழுவி தேனில் விழுந்தும் ஆயிற்று. அதுவும் நழுவி வாயில் விழ வைக்க வேண்டும். உனக்குத்தான் அனுபவம் இருக்கே ராசா... 'விடாதே' என்று என்னை நானே தட்டிக்கொடுத்துக் கொண்டேன். ஆறு மாதம் இருக்கிறதே!
*****
தமிழ்மணியை பார்த்ததுமே எனக்குப் பிடித்திருந்தது. அவன் பெயரை உச்சரிப்பதுதான் சிரமம். தமில் என்று அழைக்கச் சொன்னான். அவன், 'லிசா' எனும்போது அந்தக் கண்களில் லேசான கிறக்கம் தெரியும். முதல் நாளே அசத்திவிட்டான்.
நான் ஆயிரம் வரிகளுக்கு மேல் எழுதி இருந்த மாட்யூல், நினைத்தபடி இயங்கவில்லை. அதை சரி செய்யுமாறு அவனைக் கேட்டிருந்தேன். இரண்டு நிமிடங்கள் கண்ணை அதில் ஓடவிட்டவன், ஒரு நொடியில் அதை அழித்துவிட - நான்கு நாள் வேலை - பதற்றமானேன். நான்கு வரிகள் எழுதினான். கம்பைல் செய்து ஓட விட்டான். கட்டி அணைத்துப் பாராட்டினேன். நான்கு மாதத்துக்கு முன் இவனை பார்த்திருந்தால், டேவிட் என் வீட்டுக்குள் வந்திருக்க மாட்டான்.
*****
இந்த இரண்டு மாதத்தில் லிசாவின் மனதில் ஓரளவு இடம் பிடித்து விட்டேன் என நினைக்கிறேன். இன்று நியவோ லியோன் மெக்சிகன் ரெஸ்டாரண்டுக்கு இரவு விருந்துக்கு அழைத்திருந்தாள். அலுவலகத்தில் இருந்து நேராக சென்றதால், எனது டாமி பஹாமாஸ் உடைகளுக்கு வேலை இல்லை.
அவளுடைய அம்மா ப்ளோரிடாவில் இருப்பதாக சொன்னாள். அடுத்து, டேவிட் என்ற பாய் ஃப்ரெண்டுடன் வசிப்பதாக சொன்னபோது, இதுவரை உச்சத்தில் இருந்த எனது ரோலர் கோஸ்டர் சடாரென இறங்கியது. அவன் அதிர்ஷ்டக்காரன் என்றபோது, பெரும்பாலான அமெரிக்க பெண்களைப் போலவே அவன் ஒரு "டாஷ் டாஷ்" (கோடிட்ட இடங்களை நீங்களே நிரப்புக) என்றாள்.
"நீ ஒரு இரண்டு மாதம் முன்பே வந்திருக்க வேண்டும். அவனை வீட்டுக்கே அழைத்திருக்க மாட்டேன்," என்று அவள் சொன்னபோது இதமாக இருந்தது.
"இப்போது அவனுக்கு 'டாடா' சொல்வாயானால், நான் ரெடி," என்று சிரித்தேன்.
அவள் ஏதோ ஜோக் கேட்டது போல் நகைத்தாள்.
ம்... இன்னும் கொஞ்சம் காலம் எடுக்கும் என நினைத்துக்கொண்டேன்.
டேவிடின் செய்து வரும் 'மதம்' சம்பந்தமான ஆராய்ச்சிகள் தான் தன்னை முதலில் கவர்ந்ததாகச் சொன்னாள்.
இந்தியர்களில் பெரும்பாலானோரும் தான் தான் பெரிய ஞானி என நினைப்போமே. எனக்கு தெரிந்த, தெரியாத தத்துவங்களை உளற... அவளோ ரசித்துஜ் கேட்டாள்.
"டேவிடுக்கு உன்னை மிகவும் பிடிக்கும். ஞாயிறன்று மதியம் வாயேன். ஒரு இந்திய உணவகம் செல்லலாம், டேவிடுடன்," என்றாள்.
*****
'நான் தமில்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். அவன் இந்து மதம் பற்றி நிறைய தெரிந்தவன் என்று லிசா சொல்லி இருந்தாள். நிறைய பேசினோம். மேம்போக்காக சிலவற்றை அறிந்திருந்தான். பிரச்சிநோபநிஷத்தின் கேள்வி - பதில்களை லேசாகத் தொட்டதும் அதிர்ந்து போய்விட்டான்.
ஆனால், 'புளியங்கொட்டை சாமியாரை'ப் பற்றி அவன் சொன்னது அபூர்வமாகவே இருந்தது. அவர் வயது இரண்டாயிரம் ஆண்டுக்கு மேலாம். 'ஹான்காக் மாதிரியா?' என்றேன். 'இல்லை அவர் உடல்களை சட்டை மாற்றுவது போல் மாற்றிக் கொள்வார்,' என்றான். அந்த மகானை, அவர் வாழும் தேசத்தை பார்க்க ஆவல் பொங்கியது.
*****
டேவிட்டை என்னமோன்னு நினைத்தேன். நிஜமாகவே ஜித்தனாக இருந்தான். நமக்கு ஜாவா சர்ட்டிபிகேட் வாங்கவே தாவு தீர்ந்து போய்விட்டது. இதில் உபநிஷத் படிப்பதெல்லாம் முடியிற காரியமா? இவனுக்கு சரியான ஒரு ஆப்பும், லிசாவை லவட்ட ஒரு திட்டமும் உடனடியாக உருவானது.
புளியங்கொட்டை சாமியாரை வேண்டிக்கொண்டேன். இவனை அங்கு அழைத்துச் சென்று, அவரிடம் சிஷ்யனாக சேர்த்துவிட வேண்டும். இவன் உபநிஷ ஆராய்ச்சி பண்ணட்டும்; நான் லிசாவுடன் பிப்ரவரியில் இங்கு வந்துவிட்டால்..?
ஹா.. ஹா.. ஹா..
*
"இந்த ஜனவரியில் இந்தியா செல்கிறேன். என்னோடு வாங்களேன்... உங்கள் ஆராய்ச்சியும் முடியும்; புளியங்கொட்டை சாமியார் எனக்கு நன்றாக தெரியும்," என்றேன். சொன்னவுடன் அவரை வேண்டிக்கொள்ள ஆரம்...
அதற்குள், "தமில் உன்னுடன் நரகத்துக்கு வரவும் தயார்," என்றாள் லிசா.
அடுத்த ஒருமணி நேரத்தில் விமான டிக்கெட் புக் செய்ய வேண்டும் என முடிவு செய்தது, புளியங்கொட்டை சாமியாரின் கருணை தவிர வேறு என்ன?
முதல் பத்தியில் நழுவிய பழம் வாயில் விழுந்தேவிடும்.
******
லிசாவோடு இந்தியா செல்வது, எதோ சொர்க்கத்துக்கு காதலியுடன் செல்வது போல் இருந்தது. ஒரே தொல்லை... அவள் மடியில் கட்டியிருக்கும் இந்த பூனை டேவிட்.
அன்று பர்வத கிரியில் ஏற, லிசா சிரமப்பட்டாள். டேவிட் அவளை கண்டுகொள்ளாமல் கேமிராவை நிரப்பிக் கொண்டிருந்தான். அவளை அணைத்து அழைத்துச் செல்லும் அந்த மணித்துளிகள் நீடிக்காதா என்று ஏங்கினேன்.
புளியங்கொட்டை சாமியாரை வணங்கி, இவர்களை அறிமுகப்படுத்தியதும், அவர் அமெரிக்க ஆங்கிலத்தில் உபநிஷதம் பற்றி விளக்கியது, டேவிடை அசத்தியது. அவர் பார்வை மட்டும் லிசா மீதே இருந்தது, எனக்கு உறுத்தியது. லிசா என் காதருகே வந்து, 'இவன் பார்வை சரியில்லை... நான் கோவில் சிற்பங்களை பார்க்க வேண்டும்,' என்றாள்.
அவள் போன அடுத்த நிமிடம் அந்தப் பூனை அங்கு வந்தது. பலவீனமாக அவர் காலடியில் படுத்தது. இரண்டு மணி நேர உபதேசத்துக்கு பிறகு டேவிட், புளியங்கொட்டை சாமியாரின் வயதை கேட்டான்.
அவர் சிரித்துக்கொண்டார்.
"உடம்புக்குதான் வயது. என் ஆன்மாவுக்கு இல்லை," என்றார்.
"அது சரி, உடம்பை விட்டதும் உயிர் என்ன செய்ய முடியும்?" டேவிட்டின் குரலில் எகத்தாளம் இருந்தது.
"இந்தப் பூனை இப்போது இறக்கப் போகிறது. என்னால் அதை மீண்டும் எழவைக்க முடியும்," என்றார்.
இதுவரை அவரை குருவாக மதித்து மரியாதை காட்டிக்கொண்டிருந்த டேவிட், இப்போது வேறு விதமாக தெரிந்தான். என் காதில் லிசா சொன்னது, அவனுக்கும் கேட்டிருக்க வேண்டும்.
"சரி உன் ஆன்மாவை தருகிறாயா?" என்று டேவிட்டை சாமியார் கேட்டபோது... அப்படி ஏதாவது செய்துவிட்டால் விபரீதமாகிவிடப் போகிறது என்று டேவிட்டை தடுக்க நினைத்த என் மனத்தை, 'இவன் பூனையாகிவிட்டால் நமக்கு லிசா கிடைப்பாளே,' என்ற நப்பாசை தடுத்தது.
"நான் சொல்வதை சொல்," என்றார்.
சொன்னான் டேவிட்.
ஒரு ஒளிப் பிழம்பு அவன் உடலில் இருந்து பூனை உடலில் புகுந்த போது, புளியங்கொட்டை சாமியாரின் உடலில் இருந்தும் ஒரு ஒளிப்பிழம்பு எழுந்து, டேவிட் உடலில் புகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை.
டேவிட் (புளியங்கொட்டை?!) என் அருகில் வந்து, "இது யாருக்கும் தெரியாது. தெரியக்கூடாது. தெரிந்தது, உன்னை எலியாக்கி அந்த பூனைக்கு விருந்து வைத்துவிடுவேன்," என்றான்.
அதன் பிறகு, அவர்களை வழியனுப்பி வைத்தது, வெளியே சொல்ல முடியாத வேதனைங்க.
*ஒரு வருடம் கழித்து, லிசாவிடமிருந்து இ-மெயில் வந்தது. அதில் டேவிட்டை அளவின்றி புகழ்ந்து தள்ளியிருந்தாள்.
"டேவிட்டின் கனவு, பால் பிரவுன் போன்ற எழுத்தாளனாவது. இப்போது நிறையவே சாதிக்கிறார், தமில். இந்தியா சென்று திரும்பியதில் இருந்து மிகப்பெரிய மாற்றம், தமில். குடிப்பதில்லை. என்னை உள்ளங்கையில் தாங்குகிறார். அவர் எழுத்துக்கள் என்னை பெருமைப்பட வைக்கின்றன. உன்னால்தான் இந்த மாற்றம். மிக மிக நன்றி."
இந்த மெயிலை பார்க்க பார்க்க, என் வயிறு எரியுமா இல்லையா?
பூமிகா - யூத்புல் விகடனில் வந்த கதை.
யூத்புல் விகடனில் வந்த கதை.
- நிவேதிதா தமிழ்
உயரினங்களின் ஐந்தாம் பரிமாண பெருவெளியின் தலை நகரம். நான்காம் பரிமாணமான காலத்தையும் உள்ளடக்கியது. நமது கோள் போன்ற முப்பரிமாண உலகங்களின் முக்காலத்தையும் கருத்தரித்து, உருக்கொடுத்து, வாழ்வித்து அழிக்கும் தொழில் செய்யும் உயரினங்கள் வாழும் வெளி.
பூமிகாவின் அலுவலகம் நோக்கி விரைந்துகொண்டிருந்தான் மாயன். அது நகரத்தின் மத்தியில் இருந்த பிரபல அடுக்கு மாடியின் மூன்றாம் தளத்தில் இருந்தது. அடித்தளத்தில் சூரி. அடுத்த தளத்தில் புதன். அதற்கு அடுத்த தளத்தில் தேவதை வீனஸ். அதற்கு மேல் மாயனின் அன்புக் காதலி பூமிகாவின் அலுவலகம். அவர்களின் கால அலகுகள் நமக்கு எட்டாதவை. அவர்களின் ஒரு மணித்துளி நமது பல நூற்றாண்டுகள்.
மாயன், பூமிகாவின் வருடாந்திர செய்திறன் ஆய்வுக்காக வருகிறான். சென்ற வருடம் வந்த போது அவள் படைத்து இயக்கிக் கொண்டிருந்த டைனோசர்கள் அவனை மிரள வைத்திருத்தது. மாயன் அங்கு தோன்றியபோது பூமிகா வந்திருக்கவில்லை. அவளின் காரியாலயன் பூமிகாவின் அறையை திறந்தான். அகண்ட நாற்பரிமாண திரை விரிய, மாயனின் நான்கு கைகளும் வேகமாக செயல் இயங்கியது.
அதி வேகமாக சுற்றிக்கொண்டிருந்த கோள்கள் நிதானமாகின.
கால பரிமாணத்தின் புள்ளியை பல நிலைகளில் நிறுத்தி நிகழ்வுகளையும், அவற்றின் வீரியத்தை கணிப்பது அவன் நோக்கம். அவன் கண்ட முதல் காட்சி - அணுகுண்டால் பாதிக்கப்பட்ட குழந்தை ஓடும் காட்சி. அடுத்து சிலுவைப்போர். அடுத்ததும் மதத்தின் பெயரால் நடந்த படுகொலைகள். மத்திய ஆசியாவில், மும்பையில் அயோத்தியில், அமெரிக்காவில்...
அடுத்து அவன் கண்டது அவனை அழவைத்தது.
பசியில் இறக்கும் எதியோப்பிய சிறார்கள்.
பெண் என்பதால் கொல்லப்படும் தமிழ்க் குழந்தைகள்.
அடுத்து அவன் பார்க்க நேர்ந்ததோ அதைவிட கொடுமை... இலங்கையின் இனவழிப்பு.
இவர்களின் இன விருத்தி? சந்தோஷ சுகிப்புகளின் வாசல்கள் - நரகல் வெளியேறும் வழியின் அருகில்.
அவனின் கார் வண்ணம் ரத்த சிகப்பானது படிப்படியாக.பூமிகா உள்ளேவர அவனது தேக அனலை அவளால் உணர முடிந்தது.
"பூமிகா - என்ன இது? இவற்றில் எங்காவது புத்திசாலித்தனம் என்று ஒன்று இருக்கிறதா? தன் பிறப்பை அறியாதவர்கள் தன்னை படைத்தவனை அறிந்ததாக சொல்லி அதன் பெயரால் தனது இனத்தை கொல்கிறார்கள். அதற்கு மேல் ஆயிரம் சொல்லி இனத்தையே வேரருக்கிறார்கள். என்ன படைப்பு இது?"
"அது... வந்து..."
"உனது வேலையில் ஒரு துளியும் புத்திசாலித்தனம் இல்லை. மன்னித்துவிடு. உன்னை வேலையில் இருந்து விடுவிக்க நினைக்கிறேன்."
"நீங்கள் ஒரு பாதி மட்டும் பார்த்து முடிவெடுக்கிறீர்கள்."
"நீ காட்டேன் பார்க்கலாம்"
அவள் காலச் சக்கரத்தை மெல்ல சுழற்றினாள் - அமைதியான அந்த பூமி ஒரே நாடாக இருந்தது. மத சின்னங்கள் ஆலயங்கள் எல்லாம் கண் காட்சி பொருளாக இருந்தது. சரித்திரத்தில் இருந்து உருவான கடவுள் சரித்திரமாகி இருந்தான். மனிதர்கள் சகமனிதனை கடவுளாக பார்த்தார்கள். அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தான் மனிதன்.
"பூமிகா - ஏமாற்றாதே. மனிதனின் தற்போதைய நிலை என்ன?"
அவள் மீண்டும் கால சக்கரத்தை சுழற்ற - தன்னை படைத்தவனுக்கு (ளுக்கு?) நன்றி சொல்லிக்கொண்டிருந்தார்கள் - அமெரிக்கர்கள். பேயை விரட்ட பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்கள் சைனாகாரர்கள். மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செய்பவர்கள் அமைதியாக தெரிந்தார்கள்.
"கல்வி எப்படி?"
"உலகிலேயே எல்லோரும் விரும்பும் கல்வி இது." பூமிகா அந்த அமெரிக்க பள்ளியை சொடுக்கினாள்.
அந்த குரு, " We must know that the theory of evolution alone does not exist. There are people like me who believe in Intelligent Design," என்றாள்.
"பரிணாம வளர்ச்சி மட்டுமல்ல - நாம் அனைத்தும் அறிந்த ஆண்டவரால் படைக்கப்பட்டவர்கள் - என்ற தத்துவமும் உள்ளது. அதை நான் நம்புகிறேன்."மாயனின் செந்நிறம் மாறியது.
"நிகர் அற்ற செயல் திறன் - பரிணாம வளர்ச்சி அடிப்படைக்கு உனது பங்களிப்பு."
அவனின் கையொப்பம் முடிந்து, விடை பெரும் தழுவலில் காதல் சொன்னான் - சொன்னாள் - சொன்னார்கள்.
*
To read in Vikatan
http://youthful.vikatan.com/youth/Nyouth/nivethithathamizh30122009.asp
யுகம் - யூத்புல் விகடனில் வந்த கதை.
யுகம்
நிவேதிதா தமிழ்
அது புதிதாக உருவான பூமி. ZA56a இன்னும் உயிரினங்கள் உருவாகவில்லை. சிவாவின் C4Z8 விண்கலம் கம்பீரமாக நின்றிருக்க, அவர் அதனருகில் புதிதாக உருவாக்கிய குடிலில் கண்ணயர்ந்திருந்தான். ஷக்தி தனது புதிய ரோபோவினை வைத்து அழகிய பெண்ணுருவங்களை கல்லில் வடித்துக்கொண்டிருந்தாள்.
அவளின் கண் கை அசைவுகளுக்கு ஏற்ப சிற்பங்கள் தரமாக வந்துகொண்டிருந்தது. சிவாவின் நெற்றிக்கண் துடிக்க - திறந்தான். "SOS - உயிர் போகும் அவசரம் - உடனே வா - விஷ்ணு, பிரம்மா - Cs2x ஆண்ரமீடா". துள்ளி எழுந்து - ஷக்தியை தேடினான். அவள் திறமை ஒரு நிமிடம் அந்த அவசரத்திலும் அவனை நின்று ரசிக்க வைத்தது.
"ஷக்தி - அவசர செய்தி விஷ்ணுவிடமிருந்து. நாம் கிளம்ப வேண்டும் - மன்னிச்சுக்கோ"
"பத்தாயிரம் வருடங்களுக்கு பிறகு வந்தோம். இன்னும் இரண்டு நாட்கள் ஆகவில்லை - அதற்குள்ளா?"
"இதுவரை எனக்கு SOS செய்தி வந்ததே இல்லை. இது நிச்சயம் முக்கியமானதாகத்தான் இருக்க வேண்டும். புறப்படலாமா?"
"நீங்களும் உங்கள் பிரபஞ்ச வேலையும். எத்தனை ஆயிரம் வருடங்கள் இப்படியோ?"
"புரிந்துகொள் ஷக்தி. உனக்கு தெரியும் - விஷ்ணு எத்தனை விரும்புகிறான் என் வேலையை என்று. அவனே இந்த செய்தி அனுப்பி இருக்கிறான்."
ஷக்தி கை அசைக்க ரோபோ எல்லா பெட்டிகளையும் எடுத்து C4z8ல் அடுக்கி வைத்தது. சிவா C4z8 அமர்ந்தும் - ஷக்தி அந்த சிலைகளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
"ஷக்தி உனது ஆதங்கம் புரிகிறது. இந்த பிரச்னை முடிந்ததும் கணேஷுக்கு திருமணம்தான்"
"எட்டாயிரம் வருடங்களாக இதே பாட்டா? - குமரன் இரண்டு மணம் முடித்து விட்டான். ஆண்றமீடவில் ஒன்று பால்வழியில் ஒன்று. இந்த பிள்ளை - ஊம்..."
சிவா விண்கலத்தை இயக்கிய பின்னர் - 3டி திரையை துவக்க கை எடுத்தான். ஷக்தி அவன் கையை எடுத்து மடி மீது வைத்துக்கொண்டாள்.
"ஷக்தி - பேச முயற்ச்சிப்போமே"
"விடுமுறைதான் இல்லை - அடுத்த 15 மணி நேரம் - நமக்காக பேசுவோமே. எப்போதும் வேலைதானா? என்னதான் பிரபஞ்ச தலைவரானாலும்"
"சரி - பேசு"
"நீங்கள் பிரபஞ்ச தலைவனாகி அறுபதாயிரம் வருடங்கள் இருக்குமா?"
"இருக்கும். 190000 வருடம் சித்திரை மாதம் 4ம் தேதி என நினைக்கிறேன். அதுதானே நான் பிரபஞ்ச பொறுப்பை ஏற்க வைத்தது."
"சூரிய மண்டலத்தில் இருக்கும் பூமியில் பிறந்த மனிதன் எப்படி உருமாறி இருக்கிறான் என நினைக்க பிரமிப்பாக இருக்கிறது."
"அந்த கறுப்பு அமெரிக்கன் ஸ்டெம்ஸெல் ஆராய்ச்சிக்கு ஆணை பிறப்பித்ததுதான் முதல் படி. அது கலி தொடங்கி நான்காயிரம் ஆண்டுகள் இருக்கும். படிபடியாக மனிதனின் ஆயுள் அதிகரித்தது. நமது பெற்றோர்தான் எட்டாயிரம் ஆண்டுகள் இருந்தார்கள். நாம் Elixir - அமுதம் - கண்டெடுக்க மரணம் இல்லையென்றானது."
"அதுதான் நம் தவறு. இப்போது பாருங்கள். எல்லா சூரிய குடும்பங்களிலும் மனிதன். பிரபஞ்சமே மனிதனால் நிரம்பிவிட்டது."
"அது தவறு என்பதுபோல் பேசுகிறாய்."
"அப்படி இல்லை. நமது நிம்மதி போயே விட்டது. எத்தனை பிரச்னைகள்? Elixir பரவாயில்லை. புவியெதிர்ப்பு விசையை நீங்களே கண்டுபிடித்து அளித்தது - அனைவரும் பிரபஞ்ச வலம் நொடியில் வர உதவி விட்டது."
"அது சரி - இத்தனை நாள் இதற்காக என்னை கடவுள் என்று புகழ்ந்தவள் இன்று - என்ன ஆயிற்று?"
"மனது சரியில்லை..."
விஷ்ணு முதல் பெரிய கூட்டமே இருந்தது சிவாவையும் ஷக்தியையும் வரவேற்க.
"என்னவாயிற்று விஷ்ணு?"
"நீங்கள் Wi4டியில் பார்த்திருப்பீர்களே?"
"இல்லை - வழி இல்லை" - ஷக்தியை பார்த்தான்.
"ஓஓ சகோதரியின் தொல்லையா? சரி. ஒரு பெரிய சோதனை... எங்களுக்கு தீர்வு தெரியவில்லை"
"சொல்"
"நான்கு திக்கிலும் நான்கு - உச்சியில் கீழே - மொத்தம் ஆறு ப்ளாக் ஹோல்ஸ் - எல்லா ப்ரபஞ்ச கோள்களையும் விழுங்கிக் கொண்டிறுக்கின்றன. இன்னும் சில மணித்துளிகளில் பிரபஞ்சம் முழு இருட்டாகிவிடும்... நாம் ஒன்றும் செய்யவில்லையானால்.."
"சரி நமது D2 கலத்தை அனுப்பி அவற்றை வெடிக்க வைக்கலாம?"
"சிவா... ப்ளாக் ஹோல்ஸ் எல்லவற்றையும் விழுங்கிவிடும். D2 சக்தி மிகக் குறைவு. ஒரு பால்வெளியை மட்டும் அதனால் மீறி போக முடியும். அவ்வளவே."
"சரி D4 என்ன நிலை?"
"இன்னும் சோதனை ஓட்டமே நடக்கவில்லை"
"பரவாயில்லை. அதை தயார் படுத்த சொல்லுங்கள்."
விஷ்ணு ஒடினான்.
"வாருங்கள் - சரியான நேரம் கணிப்போம் அதை செலுத்த."
அலுவலகத்தை நெருங்குமுன்பே கதவு திறந்தது.
ஷக்தியின் கை அசைவில் - பெரும் முப்பெருமாண திரை விரிய... சிவா நாட்காட்டி விசை அழுத்தினான்.அது....
பங்குனி 28 250000... கலியுக முடிவு... என்றது.
சிவா சொன்னான்... பரவாயில்லை... திரேதா யுகத்துக்கு காத்திருப்...
அவை... காத்திருக்கவில்லை.
To Read in Vikatan
http://youthful.vikatan.com/youth/Nyouth/nivethitha03122009.asp
வியாழன், 7 மே, 2009
கெளதம் கிட்ட கேக்கணும் (எல்லாம் தெரிந்தவர்களுக்காக அல்ல)
"ஹாய் நிவி", அப்பா ராபர்ட் வந்து சேந்தான்.
"ஹாய்"
"என்ன கோவமா இருக்க?".
"ஒரு வாரமா மூடே சரியில்லை ராப்"
"புது மேனேஜர் கடிக்கிறானா?"
"அதை ஏன்கேக்கிற? பத்து வேலை சொல்றான். எட்டாவது வேலை பண்ணிகிட்டிருக்கபோ அவசரமா பத்தாவது வேலை முடிச்சியா இல்லையான்னு கேக்கிறான்."
" ஊம்னு ஒரு வார்த்தை சொல்லு ஒரே தட்டு. மகனோட தங்கப்பல்ல கொண்டாந்துடறேன்." "உன்கிட்ட சொன்னேனே கெளதம் கிட்ட கேக்கணும்".
"அவரைப் பாக்கவா போறே? நானும் பாக்கணும்" ஆட்டோவ நிறுத்தினான்.
"அம்மா எப்படி இருக்கிறாங்க?"
"இருக்காங்க. அக்கா எது பண்ணாலும் சரி. நான் பண்ணா தப்பு. எரிச்சலா வருது ராப்" .
" நான் வேணா அம்மாகிட்ட பேசவா?"
"வேணாம் சாமி. நீ போனதடவ பேசினதுல இருந்துதான் தொல்லையே ஜாஸ்தியாச்சு. கெளதம் கிட்ட கேக்கணும்."
"என்ன பத்தியே கேட்டுகிட்டிருக்கே உன்னோட வேலை எப்படி போய்கிட்டிருக்கு?"
"என்னமோ தெரியலை நிவி. எத பண்ணாலும் தப்பாவே போகுது. ஒரு marketing project கூட சக்சஸ் ஆகல. அதான் கெளதம் கிட்ட பேசலாம்னு" .
"சரியா போச்சி நீயும் என்ன மாதிரி புலம்பல்தானா?"கெளதம் வீட்டு வாசலிலேயே ஒரு குளிர்ச்சி.
" ஹாய் - வாங்க வாங்க" கெளதம் சொல்லறதே இனிமை.
"எப்படி இருக்கீங்க?" "என்னத்த சொல்ல. அழுதுட்டு போலாம்னு வந்தேன் கெளதம். இந்த புது மேனேஜர் ஒரே தொல்லை"
"Oh. let us talk. மொதல்ல இந்த ஜூஸை குடிங்க." கெளதம் கிட்ட பிடிச்சதே இந்த அமைதிதான். எதுக்கும் உணர்ச்சி வசப்படாம மெதுவா காது கொடுத்து கேக்கிற குளுமை.கொஞ்ச நேரம் சினிமா பேசினோம்.
"OK - இப்ப சொல்லு." எல்லாத்தையும் கொட்டினேன். பொறுமையா கேட்டார். அவர் ஒரு வார்த்தை சொல்லறதுக்கு முன்னாடியே ஏதோ மனசு லேசான மாதிரி இருந்தது. ஒரு வேளை - யாரும் நான் பேசறத கேக்காததுதான் என் பிரச்சனையோ?
"நிவி நீ சொல்றதுல இருந்து என்ன புரியுதுனா - நீ செஞ்ச வேலையில அவர் தப்பு சொல்லல சரியா?"
" சரி. ஆனா நான் செய்யாத வேலைய ஏன் செய்யலைன்னு கேக்கிறப்போ - என்னமோ நான் வேலை செய்யாம OB அடிச்சிண்டிருக்க மாதிரி ஒரு தொனி இருக்கே."
"இப்படி பாரேன். உனக்கு 20 வேலை இருக்குன்னு வச்சிக்க. இந்த வாரத்துல நீ முடிக்கணும்னு நினைச்சிருக்க. சரியா?"
"சரி"
"எத முதல்ல செய்வே எத அடுத்து செய்வே?"
"இது என்ன கேள்வி? ஈஸியா இருக்கறதா முதல்ல முடிச்சுட்டு அடுத்து எடுத்துன்னு பாப்பேன்." "எது அவசியம்னு பாக்க மாட்டியா?"
"எனக்கு அவசியம்னு தெரிஞ்சா உடனே பண்ணிடுவேன். எல்லாத்த பத்தியும் எனக்கு எப்படி தெரியும்"
"அப்படின்னா ஒன்னு செய். எப்போல்லாம் உனக்கு எது அவசியம்னு தெரியலையோ அப்போல்லாம் மேனேஜர் கிட்ட போ. இருக்கிற வேலைகள்ல எத முதல்ல பண்ணனும் எத அடுத்து பண்ணனும்னு கேட்டுக்க. அப்போ பிரச்சினை இருக்காதில்ல?"
"இது அவர தொல்லை பண்ற மாதிரி இல்ல?"
"நிச்சயமா இல்ல. இப்போ நீ பண்றதுதான் தொல்லை. Try பண்ணிப்பாறேன்."
"புரியுது கெளதம்"
"prioritization பத்தி சொல்றே. சரியா?" என்றான் ராப்.
"கரெக்ட். அது தெரியல்லன்னா கேட்டுக்கிறது தப்பில்ல" "அப்புறம் உன் வேலையெல்லாம் எப்படி போய்கிட்டிருக்கு ராப் ?"
"இந்த ஆறு மாசமா ஒரு ப்ராஜெக்ட் கூட சக்சஸ் ஆகல கெளதம். எங்க தப்பு பண்றேன்னே தெரியல. "
"ஆனா ரொம்ப பிசியாதான இருக்க"
"ஆமாம். நிறைய வாய்ப்புகள் வருது. ஆனா கை நழுவி போயிடுது"
"நீ சரியா திட்டமிடலன்னு நினைக்கிறேன்."
"நல்லா யோசிக்கிறேன் கெளதம். " "செயல்படுத்தும்போது - சரியா செய்யறேன்னு நினைக்கிறாயா?"
"இப்பதான் அதை யோசிக்கிறேன்"
"இனி இப்படி பண்ணு" "உன்னோட மார்கெடிங் மீட்டிங் முன்னாடி ஒரு பேப்பர் எடு. அதுல பெரிசா ஒரு "T" போட்டுக்க. அந்த "T" க்கு மேல யாரை பாக்க போறே எப்போ ஏன் - முக்கியமா என்ன எதிர்பார்க்கிற - இரண்டாவதா என்ன எதிர்பார்க்கிறன்னு எழுத்து."T" யோட இடது பக்கத்துல உன்னூட எல்லா சிந்தனைகளையும் எழுதிக்க. அதாவது இந்த நெடுக்கு கோட்டுக்கு இடது பக்கம். வலைப்பக்கத்துல அந்த யோசனைகள முக்கியத்துவத்துக்கு ஏத்த மாதிரி வகைப்படுத்து. பிறகு மீட்டிங் போ. முடிந்த பின்னாடி - அடுத்து என்ன செய்யனும்னு கீழ எழுதிக்க. உன்னோட டைரியிலயோ கணினியிலயோ போட்டு வச்சி தொடர் வேலை செய்." இந்த இடத்துல கெளதம் படம் வரைஞ்சி அழகா விளக்கினார்.
"கெளதம் - இத நான் கூட செய்யலாம்னு இருக்கேன்"
"செய் நிவி. நிச்சயமா உதவும்"
ராப் "வாவ்" என்று மட்டும் சொன்னான். ஆனால் ஏதோ சிந்தனையிலேயே இருந்தான்.
"என்ன ராப் - என்ன யோசனை பண்ற?"
" இந்த மாதிரி நான் முயற்சி பண்ணலைதான். ஆனா என் பிரச்சினை வேற மாதிரியோன்னு தோணுது. இன்னிக்கி நான் பாத்த அதிகாரி 2:50 க்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்தான். உள்ள போனதும் உங்களுக்கு 10 நிமிடம் தரேன் அதுக்குள்ளே முடிச்சிக்குங்க என்றான்.ஆனா நான் எனது ப்ரீப் கேஸ் எடுத்து கேட்லாக் எடுக்குறதுக்கு முன்னாடியே அவனோட பொண்ணு செஸ் விளையாடறது பத்தியும் அவளோட டென்னிஸ் திறமை பத்தியும் கணக்குல அவ புலியா சிங்கமா தெரியலைன்னும் கத சொல்ல ஆரம்பிச்சுட்டான். அவன் கதைய முடிக்கும்போது மணி 3:15. நான் என்னதான் நீ சொன்ன "T" போட்டு போனாலும் டீ குடிச்சிட்டு போனாலும் இவன மாதிரி ஆளுங்ககிட்ட வேலைக்கி ஆகும்னு நினைக்கிற? எனக்கு கிடைக்கிற ஆளுங்க - உம் என்னத்த சொல்ல."
"இது ஒரு அருமையான வாய்ப்பு ராபர்ட். டேல் கார்நிகி படிச்சிருக்கியா?"
"இல்ல கெளதம்"
"போகும்போது நினைவுபடுத்து. தரேன். நீ முதல்ல ஒரு Channel அதாவது அவர் மனசுக்குள்ள போறதுக்கு வழி உருவாக்கிக்க. அப்புறம் பிசினஸ் தானா நடக்கும். நீ பேசினாதான் வேலை நடக்கும்னு இல்ல. அடுத்தவுங்கள பேசவிட்டு கவனித்தாலும் நடக்கும் - நான் இங்க கேட்டாலும் என்ற வார்த்தை உபயோகப்படுத்தல. கவனிக்கணும். Improve your Listening skills. அடுத்த தடவை போகும்போது அவர் மகளைப் பத்தி நீ முதல்ல கேளு. முடிஞ்சா ஒரு விநோதமான கவர்ச்சியான செஸ் போர்டு வாங்கிப்போ. T ய மறந்திடாத."
"கெளதம் நீ எனக்கு மேனேஜரா இருந்திருக்கணும்." ராபர்ட் முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது. நான்தான் குழம்பினேன்.
"கெளதம் பேசினா பரவாயில்லை. நீ சொல்லற மாதிரி வேலைக்காகும். என்னோட சிடுமூஞ்சி மேனேஜர் இருக்கானே - ஒரு கொட்டேஷன் தயார் பண்ணனும்னா நான் இருபது கோப்புகளை பாக்கணும். மொத்தமா ஒரு நாலு மணி நேரமாவது வேணும். ஆனா அரை மணி நேரத்துல கேபின விட்டு மூச்சி இறைக்க ஓடி வருவான். என்னாச்சு பண்ணிட்டியான்னு. மானம் போவும் தெரியுமா?"கெளதம் புன்னகைத்தார். அது குழந்தை தனது ஷூவை மாற்றி போடும்போது தாய் சிந்தும் புன்னகை போல இருந்தது. நிச்சயமாக ஏளனம் இல்லை.
"உன்னோட மேனேஜருக்கு எத்தனை வருட அனுபவம் இருக்கும்? ஐ மீன் மேனேஜராக? எத்தனை இடத்தில் மேனேஜராக வேலை பார்த்திருப்பார்?"
"அவர் வயசு 50 க்கு கிட்ட இருக்கும். மேனேஜராக இது ஐந்தாவது இடம். சீனியர் மேனேஜராக வந்திருக்கிறார்."
"அப்படி இருக்கும்போது - அவரது எதிர்பார்ப்பு அதாவது அரை மணியில் ஒரு கொட்டேஷன் - சரின்னு நான் நினைக்கிறேன். நீ பண்றதுதான் சரியான வழின்னு நீயா ஒரு முடிவுல இருக்க. நாளைக்கு அவர்கிட்ட பேசு. முரளி நீங்க அரை மணி நேரத்துல எப்பவும் கொட்டேஷன் எதிர்பார்க்கிறீங்க ஆனா எனக்கு நாலு மணி நேரம் ஆகுது. நான் எப்படி நீங்க எதிர்பார்க்குற மாதிரி அரை மணியில பண்ணறதுன்னு எனக்கு வழிகாட்டுங்க - Guide me please - அப்படீன்னு கேளு. நிச்சயம் வழி கிடைக்கும். யாராவது அவருக்கு அரை மணி நேரத்துல பண்ணி தந்து இருக்கலேனா அவர் எதிர்பார்க்க மாட்டாரு."
"நிச்சயமா முடியாது கெளதம்." எனக்கு மூக்கிற்கு மேல் கோபம் கொப்பளித்தது.
"நீ கணினியிலதானே கொட்டேஷன் தயார் பண்றே?"
"ஆமாம்"
"நீ சொன்ன இருபது கோப்புகளும் கணினியில இருக்குதானே?"
"அது இல்ல. கோப்புகள் தனி பைலில்தான் - அதாவது பேப்பரில்தான்" சொல்லும்போதே எனக்கு ஏதோ பொறி தட்டியது. ஆமாம் இது எல்லாத்தையும் எக்ஸ்செல்ல போட்டா அஞ்சே நிமிஷத்துல பண்ணிடலாம் இல்ல? எனது நிலமைய நினைச்சி நானே சிரிச்சுகிட்டேன்.
"நிவி என்ன சிரிக்கிற?"
"இல்ல கெளதம் - இதுக்கு மேல நீ எதுவும் சொல்ல வேணாம். நான் பாத்துக்கிறேன்."
"அம்மா எப்படி இருக்காங்க நிவி"
"ஒ - நல்ல இருக்காங்க" சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டேன். ராப் சிரித்தான். கெளதம் பார்வைக்கு பதில் சொல்லும் விதமாக நானே ஆரம்பித்தேன்.
"இல்ல கெளதம். ராப் கிட்ட அம்மாவை பத்தி குறை சொல்லிண்டு வந்தேன். அதான் சிரிக்கிறான்"
அப்போ கெளதம் கிட்ட வேலை பார்க்கிற முத்து பதட்டமாக பைக்கை நிறுத்திவிட்டு ஓடிவந்தான். "சார் இ 4 ல ஒரு விபத்து சார். நம்ம ஜெர்மன் மெஷின் லாக் ஆயிடிச்சி சார். மாணிக்கம் கைல அடி சார்"இது ஒரு பதட்டமான தருணம். அமைதியா பிரார்த்தனை பண்ற சர்ச்சுல அரைகுறை உடையோட ஒரு பொண்ணு திடீர்னு நடுவுல ஒய்யாரமா வரும்போது எல்லோரும் பாதிரியாரை கவனிக்கிற மாதிரி நானும் ராபர்ட்டும் கெளதம் மேல கண் பதிச்சோம்.கெளதம் நிதானமா எழுந்தார். என்ன அடி யாருக்காவது உயிர் ஆபத்தா என விசாரித்தார். மாணிக்கத்தை மருத்துவமனைக்கு அழைத்து போகவும் இயந்திரத்தை நிறுத்தவும் ஒரு பணியாளரை அழைத்து நாளைய ஷிப்மெண்ட் 8 மணி தாமதாகும் என்றும் தனித்தனியாக உத்தரவுகள் தந்தார். முத்துவிடம் பதட்டபடவேண்டாம் எனவும் தான் 10 நிமிடத்தில் அங்கு இருப்பதாகவும் சொன்னார். முத்துவின் பதட்டம் காணாமல் போனது. அவனும்தான்.
நாங்கள் கிளம்ப ஆயத்தமானோம். ஞாபகமாக டேல் கார்நிகி புத்தகத்தை - ராப் கேட்கவில்லை - கொடுத்தார்.அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டு வெளியேறும் போது - நிச்சயம் அடுத்த வாரம் பார்க்கலாம் என சொன்னது மட்டும் காதில் இனித்தது.