Pages

செவ்வாய், 28 டிசம்பர், 2010

கடவுளும் கந்தசாமியும். - நிவேதிதா தமிழ் - உயிர்மெய் - உயிரோசையில் வெளிவந்த சிறுகதை.

கடவுளும் கந்தசாமியும்.
நிவேதிதா தமிழ்

(புதுமை பித்தனின் கடவுளும் கந்தசாமி பிள்ளையும் சிறுகதையின் தழுவல். பிள்ளை - இல்லை! - கடைசி வரியில் புரியும்)
உயிர்மெய் - உயிரோசையில் வெளிவந்த சிறுகதை.
கந்தசாமி கிழற்கு கடற்கரை சாலையின் அந்த பெரிய பங்களாவிலிருந்து பெருமிதத்தோடு வெளியில் வந்தார். ஹவாய் செருப்பில் போட்டிருந்த ஊக்கு - திரும்ப கழண்டுவிட - கையில் எடுத்து பொருத்தினார். கந்தசாமி போக்குவரத்து துறை அலுவலகத்தில் கடை நிலை ஊழியர். தன் மகனுக்கு ஒரு பொறியியல் கல்லூரியில் 4 லட்சம் தந்து இடம் உறுதி செய்து விட்டு வெளியில் வந்திருக்கிறார். தெய்வானைக்கு ஒரு போன் செய்து சொல்லலாமா என எண்ணினார். வேண்டாம் - நீ ஒழுங்கா பேசியிருந்தா இன்னும் அம்பதாயிரம் கம்மி பண்ணியிருக்கலாம் என்பாள் - அவளுக்கு நம்மேல் அவ்வளவுதான். டாஸ்மாக் போய்விட்டு வீட்டுக்கு போகும்போது சொல்லலாம். கொஞ்சம் வாடை வந்தால் அவ்வளவு பேச மாட்டாள் என எண்ணிக்கொண்டார். இங்கிருந்து மூணு பஸ் மாறினால்தான் - அவர் அண்ணா நகர் சென்று சேர முடியும். இந்த பஸ் டிக்கெட்ட எப்படியெல்லாம் ஏத்திட்டாங்க - சாதா பஸ் கிடைக்குமா என எண்ணமிட்டார். கந்தசாமி ஒன்றும் வசதி இல்லாத ஆள் இல்லை. அவரின் காக்கி பேன்ட் பழுப்பேறிய வெள்ளை சட்டை - காதறுந்த ஹவாய் செருப்பை பார்த்து அப்படி நினைக்காதீர்கள். அவரின் இன்னோவா காரை எடுத்துக்கொண்டுதான் தெய்வானை அவள் அம்மா வீட்டுக்கு - போய் இருக்கிறாள். டாடா சுமோவை விஜய் பட சூட்டிங்கிற்கு வாடகைக்கு அனுப்பி இருக்கிறார்.

பஸ் வருகிறதா என பார்த்துக்கொண்டிருக்கும் போதுதான் அந்த சபாரி சூட் போட்ட ஆசாமி அவரை நோக்கி வருவதை பார்த்தார். யாராவது சி பி ஆசாமியாக இருக்கும் என நினைத்துக்கொண்டார். அவர்கள்தான் இப்போதெல்லாம் சபாரி சூட் போடுகிறார்கள்.
இந்த சி பி - ரெய்டு என தினம் படிப்பது அவருள் ஒரு உறுத்தலை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் என்ன? அவர் நீதியாக நேர்மையாகத்தானே நடந்து கொள்கிறார். காசு வாங்கி ஒருதடைவையாவது அவரே வைத்துக்கொண்டிருப்பாரா? எல்லோருக்கும் அவரவர் பங்கை சரியாக கொடுத்துவிடுவார். அதேபோல் அது லைசென்சோ - புதிப்பித்தலோ - வாங்கிய காசுக்கு சரியாக முடித்து கொடுத்துவிடுவார். அது மட்டும் இல்லாமல் - ஆடம்பரம் துளியும் கிடையாது. நம்மகிட்ட எல்லாம் அவங்க - சி பி - ஏன் வருகிறார்கள் - வந்தாலும் இப்ப சீட் வாங்கி தந்தாரே - அமைச்சரின் மைத்துனரின் உதவியாளர் அவர் பாத்துக்க மாட்டாரா?
அந்த சபாரி சூட் ஆசாமி அருகில் வந்து நின்று இவரையே பார்த்தார். ஒருவேளை - வண்டி ரொம்ப ஓட்டையா இருக்கும் - அதான் லைசென்ஸ் புதுப்பிக்க நம்மளை இங்க வந்து மடக்கராரோ என நினைத்தார். அந்த ஆள் சிரித்தார் - இவர் எண்ணத்தை புரிந்து சிரித்ததைப்போல் இருந்தது இவருக்கு, "இங்கிருந்து அண்ணா நகர் செல்ல வேண்டும் - எப்படி செல்வது", என தூய தமிழில் அவர் கேட்டது கந்தசாமிக்கு வேடிக்கையாய் இருந்தது.

"நானும் அங்கதானுங்க போணும். பஸ்சுக்கு பாக்கிறேன்", என்றார்.
"வாடகை சிற்றுந்துகள் இங்கு கிடைக்காதா?" - மறுபடியும் அவரின் தமிழ் உறுத்தியது.
"டாக்ஸி கேக்கறிங்களா? கிடைக்கும். அந்த ரோடு முக்குல ஒரு பெரிய ஹோட்டல் இருக்கு பாருங்க - அதும் வாசல்ல நிறைய நிக்கும்". சொன்னவர் - இந்த ஆள் கூட ஒட்டிகிட்டா - பஸ் காசு மிச்சம் - சீக்கிரமும் போய்விடலாம் என எண்ணமிட்டவராக - "அண்ணா நகர்ல எங்க போவணும்" - என்றார்.
சபாரி ஆசாமி, "நீங்களும் அங்கு போவதாகதானே சொன்னீர்கள் - என்னோடு வரலாமே", என்றார்.

ஒருவேளை - கட்டிங்குக்கு ஆள் சேர்க்கிற மாதிரி நம்மை பாதி காசு கொடுக்க சொல்வாரோ என்ற எண்ணத்தை தவிர்க்க இயவில்லை.
"இல்லை இல்லை - நீங்கள் காசு எதுவும் தரவேண்டாம்" - என சபாரி ஆசாமி சொன்னதும், திடுக்கிட்டார். "என்னங்க இது நா மனசுல நினைக்கறதுக்கு பதில் சொல்றிங்க - நீங்க யாரு?" என்றார்.

"கடவுள் என்று வைத்துக்கொள்ளுங்களேன்", என்றார் கடவுள்.
யாராவது சாமியாராக இருக்கும் என எண்ணினார் கந்தசாமி.
"அப்படியும் இருக்கலாம்" என்றார் கடவுள்.
கொஞ்சம் திகிலாக இருந்தாலும், சமாளித்துக்கொண்டு - "சரி வாங்க போலாம்" - என்றார் கந்தசாமி.
"இது எந்த மாதிரியான உணவகம்".
"பணக்காரங்க வார இடமுங்க. டாஸ்மாக் போனா நூறு ரூபாயில முடிச்சிகிறது இங்க ஆயிரம் ஆவுங்க. நமக்கெல்லாம் கட்டுப்படி ஆகாதுங்க. போவணும்னு ஆசை - நாம் போட்டிருக்க சட்டையை பாத்தாலே உட மாட்டனுங்க உள்ள".
"ஆசை இருந்தால் போகலாமே."
"உடமாட்டானுங்க" என ஏக்கத்தோடு சொன்னார் கந்தசாமி.
"நான் பார்த்துக்கொள்கிறேன். வாரும்", என சொல்லி அவர் கை பிடித்து அழைத்து சென்றது - ஏனோ திருவிளையாடல் தருமியை நினைவுக்கு கொண்டுவந்தது கந்தசாமிக்கு.
வணக்கம் சொல்லி கதவு திறந்த காவலாளியும் - மரியாதையாக அழைத்து சென்று நாற்காலியை சரிசெய்து அமர வைத்த பணியாளும் - புது அனுபவமாக இருந்தது கந்தசாமிக்கு.
"என்ன பானம் அருந்தப்போகிறீர்கள்", என சபாரி ஆசாமி கேட்டது - சற்று எரிச்சலை தந்தாலும். "இந்த இடத்துல எல்லாம் - ரெட் லேபில் பிளாக் லேபில் - சாப்பிட்டாதான் மரியாதை. ஆனா ரொம்ப வெலைங்க - எதுனா சாதாரணமா சொல்லுங்க" என்றார்.

"பரவாயில்லை நான் பணம் தருகிறேன் - சொல்லுங்கள்" என்றார் கடவுள்.
பணியாள் கொண்டுவந்த பிளாக் லேபில் கடவுளிடமும் - கடவுள் கேட்ட பழ ரசம் - கந்தசாமியிடமும், இடம் மாற்றி வைக்கப்பட, கடவுள் மாற்றி வைக்க சொன்னார். அப்போது, பழ ரசத்தின் சில துளிகள் கந்தசாமியின் உடை மீது பட, பணியாள் பதறி துடைத்தான். அப்போதுதான் தனது உடை - சபாரியாக மாறி இருப்பதை கந்தசாமி கவனித்தார்.
இந்த ஆள் எதுக்கு இப்ப நம்மகிட்ட வந்து வித்தை காட்டறான். ஒருவேளை வாயிலிருந்து லிங்கம் எடுத்து காட்டி தெய்வானைகிட்ட 2 லட்சம் சுருட்டினானே புளியாங்கோட்டை சாமியார் - அதுமாதிரி ஏதாவது பிளான் பன்றாரோ?
கந்தசாமிக்கு குழப்பமாக இருந்தது.
இரண்டு பெக்குகள் உள்ளே போனதும் - கொஞ்சம் தைரியம் வந்தது.
"கொஞ்சம் சித்து வேலை தெரியும் போலிருக்கு" "நிறையவே தெரியும். அதனால்தான் என்னை ஆதி சித்தன் என்றும் சொல்வார்கள்", என்றார் கடவுள்.

ரெண்டு பெக்குக்கு - ஏறி இருக்கணுமே - ஒருவேளை - உசந்த சரக்குன்றதாலையா இல்லை - இந்த ஆள் பேசறது இறக்கி விட்டுடுதா - சந்தேகமாயிருந்தது கந்தசாமிக்கு.
"இன்னும் கொஞ்சம் ஆர்டர் பண்ணலாமா", என்று கந்தசாமியின் பதிலுக்கு காத்திருக்காமல் பணியாளை அழைத்தார் கடவுள்.
நான்கு இளைஞர்கள் - இரண்டு மேஜைகள் தள்ளி - இன்னொரு பணியாளை - ஆங்கிலத்தில் திட்டிக்கொண்டிருந்தார்கள். வார்த்தைகள் தடித்து இருந்தன. இருவரும் அங்கு கண்களை ஒட்டினர். "சிறுவர்கள் - இவர்கள் கூடவா மது அருந்துகிறார்கள்", கேட்டார் கடவுள்.

"கிரகம் சார். அதுல ஒருத்தன் எம் மவன். அவன் அம்மா கொடுக்கற செல்லம்க. அவனுக்காவதான் நான் இங்க வந்து கண்டவன் கால்ல உழுந்து 4 லட்சம் அழுது இஞ்சினீரிங் சீட் வாங்கினேன். இது அடிக்கிற கூத்த பாருங்க. ஒரு வார்த்தை கேக்க முடியாதுங்க. அவன் அம்மா பத்ர காளியாட்டம் ஆடுவா. தலை எழுத்துங்க", மிகவும் நொந்துகொண்டார் கந்தசாமி. "பரிதாபம்தான்" -என்றார் கடவுள்.

ஆறு பெக் உள்ளே போயிருக்க, இதுக்கு மேல் இந்த ஆளுக்கு செலவு வச்சா நல்லாயிருக்காது என நினைத்த கந்தசாமி, "சரிங்க சார். போலாமா?" என்றார்.
சபாரி ஆசாமி பையிலிருந்து வந்த ஆயிரம் ரூபாய் நோட்டு கற்றை பிரமிப்பாயிருந்தது கந்தசாமிக்கு, இன்னிக்கு நமக்கு நல்ல நேரந்தான், என எண்ணிக்கொண்டார்.
"அண்ணா நகர்ல எந்த தெருவுங்க", என்றார் வெளியில் நடந்துகொண்டு.
"அங்கு கந்தசாமி என்பவரை பார்க்க வேண்டும். போக்குவரத்து துறையில் வேலை செய்கிறார். விலாசம் தேடி கண்டுபிடிக்க வேண்டும்", என்றார் கடவுள்.
"அட - அது நாந்தாங்க" என்றார் கந்தசாமி. ஜானி வாக்கர் அவரின் சிந்தனை வேகத்தை குறைத்திருந்தது போலும்.
"சரி - எதுக்கு பாக்கணும்?" "இந்த உலகத்துக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. உங்கள் வீட்டில் தங்கி ஒருசில நாட்கள் இருந்து - உலகம் எப்படி போய்க்கொண்டு இருக்கிறது என தெரிந்துகொள்ள ஆசை. அதுக்கும் மேல .. உங்களுக்கு இன்று நேர இருக்கும் ஒரு பெரிய இழப்பிலிருந்து உங்களை காப்பாற்றவும் சித்தம். நீங்கள் என் பேச்சை கேட்கும் பட்சத்தில்" என்றார் கடவுள்.

"என்னமோ நீங்க சொல்றது புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு.", என்றபடி தான் கொண்டுவந்த பணத்தில் மீதி வைத்திருந்த 25,௦௦௦ ரூபாய் சரியாக இருக்கிறதா என பார்க்க கால்சட்டை பையில் கைவிட்டார். அப்போதுதான் - தனது உடை மீண்டும் பழைய உடையாக மாறி இருப்பதை கவனித்தார். இழப்புன்னு சொல்றாரே .. இதுதான் சாமியாருங்க விரிக்கிற மாதிரி வலையா?
இந்த ஆள நம்பலாமா கூடாதா - என எண்ணியபடி, டாக்ஸி இல் அமர்ந்தார்.
ஏற்கனவே நம்ம அக்கா, பொண்டாட்டி தெய்வானை பத்தி தப்பா சொல்லிக்கினு இருக்குது. செக்ரடேரைட்ல வேலை பாக்குற அவ தங்கச்சி புருசன பாக்கத்தான் அப்பப்ப அவ அம்மா வீட்டுக்கு போறான்னு. நாம நம்பலைதான். இருந்தாலும் - இந்த ஆளு ஷோக்கா வேற இருக்கான். இவனை கொண்டுபோய் வீட்டுல வச்சா? சரி... இன்னும் ரெண்டு நாள் லீவுதான். நாம வீட்டுலதான் இருப்போம். சிவா வந்திருக்கான்னு சொல்லிடுவோம். அவன்தான் நானுன்னு சொல்லி வேலைல சேந்தோம் - அதனால அவளால ஒன்னும் சொல்ல முடியாது. இந்தாளுகிட்ட எப்படி சொல்றது!
இப்படி எண்ணமிட்ட கந்தசாமி, "சரிங்க வாங்க. ஆனா ஒரு கண்டிசன் - இந்த சித்து வேலை எல்லாம் பண்ணக்கூடாது. ரெண்டு நாள் இருக்கலாம். ஏன்னா அடுத்த ரெண்டு நாள் லீவு. நாளைக்கு அரசாங்கமும் எதிர் கட்சியும் வேற வேற காரணங்களுக்காக பந்த். அடுத்த நாள் ஞாயிறு. நீங்க இருக்கலாம். தெய்வானைக்கு எங்க வூட்டு மனுஷாள புடிக்காது. ஆனா - பத்தாவது முடிச்சதும் வீட்டை விட்டு ஓடிப்போன எங்க சித்தப்பா மவன் சிவா நீங்கன்னு சொல்லிடறேன். அவன் பேர சொன்னா அவளால ஒன்னும் சொல்ல முடியாது. திங்கக்கிழமை காலைல கிளம்பிடணும் - சரியா?" என்றார் கந்தசாமி.
கடவுள் சரி என்று சொல்லி முடிப்பதற்குள், "இன்னொரு விஷயம் - இந்த ரெண்டு நாளைக்கி டாஸ்மாக் செலவு உங்களது - கே வா?" அந்த காரின் டிரைவர்க்கு கேட்காத தொனியில் பேசினார்.
"சரி", என்றார் கடவுள். ஆனால் தொடர்ந்தார். "அது எப்படி ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் பந்த் பண்றாங்க?" என்றார்.
கந்தசாமிக்கு அரசியல் பிடிக்கும்.அதிலும் அவர் சார்ந்திருக்கும் கட்சி தலைவரை மிக பிடிக்கும். "எதிர் கட்சிங்க பண்றது அக்கிரமுங்க. டாஸ்மாக் எல்லாம் மூடணுமாம். என்ன மாதிரி நாள்முழுக்க உழைக்கிற ஏழைங்களுக்கு இத்த உட்டா என்னங்க இருக்கு. அதுக்காவ பந்த் பண்றாங்க. நம்ம தலைவரு ராஜ தந்திரங்க. அரசியல் சாணக்யன்னு சும்மாவா சொல்றாங்க. இன்னிக்கி எம் பையனுக்கு 14 லட்ச ரூபா இன்ஜினியரிங் சீட்ட நாலு லட்சத்துக்கு வங்கி இருக்கேன்னா - தலைவருதாங்க. இப்ப நான் பாத்துட்டு வந்த மினிஸ்தரு... "

கடவுள் சிரிப்பது மாதிரி தெரிய சற்று நிறுத்தினார் கந்தசாமி. ஆனால் கார் டிரைவர் கவனிப்பதை அறிந்து தொடர்ந்தார்.
சத்தம் கொஞ்சம் அதிகம் இருந்தது. "தங்கமானவருங்க. இந்த பந்துக்கு நம்ம தலிவரு எப்படி பதிலடி கொடுத்தாரு தெரியுமாங்க?எதிர்கட்சிகளின் அராஜக போக்கை எதிர்த்து அதே நாளில் பந்தனு அறிவிச்சுட்டாறு. பள்ளி கல்லூரி அரசு அலுவகங்கள் இயங்காதுன்னு அறிவிச்சதுகூட வித்தியாசம் இல்லீங்க. அரசு நடத்தும் அத்தியாவசிய பொருள் விற்பனை நிலையங்களும், டாஸ்மாக்கும் போலிஸ் பாதுகாப்புடன் இயங்கும்னு அறிவிச்சு பட்டய கிளப்பிட்டாருங்க."
அவரின் பேச்சில் தெறித்த வேகம் கடவுளை கொஞ்சம் கலவரப்படுத்தியது.
வீட்டின் கேட்டை பார்த்து கடவுள் கொஞ்சம் அசந்துதான் போனார். இத்தனை பெரிய வீடா.
"எம்மா நேரம்யா?" என்று ஆரம்பித்த தெய்வானை, உடனிருந்த சபாரி ஆசாமியை கண்டு அடங்கினாள்.
கடவுள் ஓட்டுனரிடம் காசு கொடுக்க .. "இது எங்க சித்தப்பா மவன் சிவா... தெய்வானை" என்று மென்று முழுங்கிக்கொண்டிருந்தார் கந்தசாமி.
"மதினிக்கு வாங்கி வந்த வைர அட்டிகை காரிலேயே இருக்கு கந்தசாமி", என கடவுள் சொல்ல, தேவானையின் முகம் மலர தொடங்கியது. அதை பார்த்ததும் ... முழுதாக மலர்ந்து இருந்தது.
சபாரி ஆசாமியின் கையில் பெட்டி ஒன்றும் இல்லாததால் .. சரி ஒரு வேளை சாப்பாடுதானே .. ஒழியட்டும் என நினைத்தவளாய் .. "எங்கம்மா வீட்டுல இருந்து வறுத்த கருவாடு கொண்டாந்தேன். ரசம் மட்டும்தான் வச்சேன். தம்பி வந்துருக்காரு.. பத்து நிமிஷம் இருய்யா. ஒரு கொழம்பு வச்சிடறேன்". என்றாள்.
"சித்து வேலையெல்லாம் பண்ணக்கூடாதுன்னு சொன்னேன் இல்ல.. " என்று மெதுவாக முனகிவிட்டு .. "தெய்வானைக்கி விருந்தாளிங்களை புடிக்கும்க ... " என்று சத்தம்மாக சொன்னார்.
அடுத்து உண்டு முடித்து வெளியே வந்து கந்தசாமி சார்ம்ஸ் சிகரெட்டை பற்றவைக்கும் வரை.. அவர் பேசிய அரசியல் சித்தாந்தங்கள் .. அவர் விளக்கிய 2 G விவகாரங்கள் எதுவும் கடவுளுக்கு விளங்கியதா என கந்தசாமிக்கு சந்தேகமாகவே இருந்தது. இன்னோவா காரின் டிரைவர் இன்னும் காரை துடைத்துக்கொண்டிருந்தான்.பதினோரு மணிக்கு மேல் ஆகி இருந்தது. "தெய்வானை .. டிரைவரை அனுப்பிடலாமா?" என கந்தசாமி கேட்கும்போது அவரின் கைபேசி அழைத்தது.
தெய்வானை வெளியே வர ... "ஐயோ .. என்னா ஆச்சு எம் புள்ளைக்கி", என போனில் அலறினார் கந்தசாமி.
தெய்வானையின் கூப்பாடு அதிகமாக .. "தே .. சும்மா இரு. அண்ணாசாலையில பைக் ஆக்சிடேண்டாம்.. அவனுக்கு இஷ்டத்துக்கு காச குடுக்காதேன்னா கேக்கிறையா.. நல்லா குடிச்சிட்டு வந்திருப்பான். வா போலாம் .. டிரைவர் வண்டிய எடுப்பா". என்றார். வீட்டுக்கு போகும் நினைப்பில் இருந்த டிரைவர் .. வெறுப்பாக காரை எடுத்தான்.
கடவுள் முன் இருக்கையில் அமர .. கந்தசாமியின் பக்கத்தில் அமர்ந்தபடி புலம்பிக்கொண்டு வந்தாள் தெய்வானை.
நிறைய ரத்தம் சேதமாகி இருக்க.. அவர் பிள்ளையின் இரு நண்பர்கள் அவனுக்கு தங்கள் கைத்துண்டில் கட்டு போட்டு இருந்தார்கள். "தூக்குங்கபா .. இந்த ஆஸ்பத்திரிக்கி போலாம் .." என்றார் கந்தசாமி.
"இந்த மருத்தவமனை போலி.. இரண்டு கட்டிடங்கள் தள்ளி இருக்கும் அந்த பெரிய மருத்துவமனைக்கு சென்றால்தான் குழந்தையை காப்பாற்ற முடியும்" என்றார் கடவுள்.
"
சும்மா இருய்யா.. இப்பத்தான் நாலு லட்சம் குடுத்து சீட் வாங்கினேன்.. அந்த ஆஸ்பத்திரியில அநியாய காசு புடுங்குவானுங்க.." என்று சொன்ன கந்தசாமி .. மனைவியை பார்த்தார். தெய்வானை ஆமோதித்து .. இங்கியே போலாங்க என்றாள்.
பையனை அட்மிட் செய்து .. தெய்வானையை உடன் இருக்க செய்து.. கட்டச்சொன்ன பதினாயிரத்துக்கு அந்த சபாரி ஆசாமியிடம் இருந்து ஏதாவது பெயருமா என பார்க்க கந்தசாமி வெளியில் வந்தார். அந்த ஆளை காணவில்லை.
பின்னாடியே வந்த தெய்வானை.. "பாத்தீங்களா ... ஒரு கஷ்டம்னு வந்தவுடனே .. உங்க வீட்டு ஆளுங்க என்ன பண்றாங்கன்னு..." என்றாள்.
நாம் படைத்த மனிதர்களுக்கு சக மனிதர்களை விட அது பிள்ளையாய் இருந்தாலும் ...அவர்கள் படைத்த பணத்தின்மீதுதான் அக்கறை .. என்ன கொடுமை இது. என்று எண்ணியபடி .. கடவுள் நடந்துகொண்டிருந்தார்.

 உயிர்மெய்யில் படிக்க.
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=3808